சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் (என்யுஎஸ்) பயிலும் மாணவிகளைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்கு சென்ற தொடக்கக் கல்லூரி மாணவரான 18 வயது ஸக்கரி லிம் யோங் ஹாவ், பிரச்சினையில் சிக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்பல்கலைக்கழகத்திற்குச் சென்ற லிம், அங்குள்ள பெண் கழிவறைக்குள் நுழைந்து அங்கிருந்த பெண் ஒருவரை எட்டிப் பார்த்தார்.
கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்ணின் மானத்திற்குப் பங்கம் விளைவித்ததாக கடந்த மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்ட லிம்முக்கு இன்று (மார்ச் 30) 21 மாத நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை கண்காணிப்பின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் இரவு 10 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை அவர் வெளியே செல்லக்கூடாது.
சிங்கப்பூரரான லிம், 120 மணி நேர சமூகச் சேவையாற்ற வேண்டும். தமது மகனின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவரது பெற்றோருக்கு $5,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.
லிம் தற்போது தொடக்கக் கல்லூரி மாணவர் கிடையாது. அவர் எந்த தொடக்கக் கல்லூரியில் பயின்றார் என்பது குறித்த விவரம் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. கடந்த மாதம் அவர் தேசிய சேவையில் சேர காத்திருந்தார்.


