சிலேத்தார் வெஸ்ட் லிங்க்கில் நேற்று (மார்ச் 30) பின்னிரவில் டாக்சி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த டாக்சியின் 58 வயது ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் குறித்து இரவு 1.26 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் இரண்டு குழாய்கள் மூலம் நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
மூச்சுப் பேச்சின்றி கிடந்த டாக்சி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
டாக்சி தீப்பிடித்து, ஓட்டுநர் உயிரிழந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்ததாக கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தின் தலைமைத் தொடர்பு அதிகாரி டேமி டான் தெரிவித்தார்.
அந்த ஓட்டுநர் தீக்காயம் அடைந்து, டாக்சிக்கு வெளியே கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். டாக்சி தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து குடிமைத் தற்காப்புப் படையும் போலிசும் விசாரித்து வருகின்றன.