கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வாரம் ஒருநாள் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
கிட்டத்தட்ட 200,000 தொடக்கப்பள்ளி மாணவர்கள் நேற்று பள்ளியில் கொடுக்கப்பட்ட நேர அட்டவணைப்படி வீட்டில் இருந்து படித்தனர்.
கல்வி அமைச்சு உருவாக்கியுள்ள சிங்கப்பூர் மாணவர்கள் கற்றல் தளம் (Singapore Student Learning Space) என்ற இணைய கற்றல் தளத்தில் சிலர் காலை 7.30மணிக்கே இணைந்தனர். சிலருக்கு பிற்பகலில் நேரம் குறிக்கப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்து கற்றலில் இணைய வகுப்புகளும் பயிற்சித் தாட்களைச் செய்வதும் இடம்பெறும். உடற்பயிற்சி வகுப்புகளும் இணையம் வழி நடைபெற்றன. யுடியூப்பில் இடம்பெற்ற பயிற்சிக் காணொளியைப் பார்த்து மாணவர்கள் பயிற்சி செய்தனர்.
இந்தத் தளத்தில் இணைய சில மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் ஓங் யி காங், தொழில்நுட்பத்தை சீர்செய்யும் வரை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பலவற்றை சரிப்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து மாணவர்களையும் வாரம் ஒருநாள் வீட்டிலிருந்து கற்கும் நடவடிக்கையை தொடங்குவது முக்கியம் என்றார் அவர்.
இந்த நடவடிக்கையை நேற்று தொடங்கிய பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் ஓங், "இது எளிதானதல்ல. குறைகள் அற்றதும் அல்ல. இத்தகைய பரிசோதனை காலகட்டத்தில் எங்களது கூட்டுமுயற்சிகளைப் பயன்படுத்துகிறோம்," என்றார்.
அதேநேரத்தில், மாணவர் பராமரிப்பு தொடர்பாக மாற்று ஏற்பாடு செய்ய முடியாத குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறந்திருந்தன.
செம்பவாங் தொடக்கப்பள்ளிக்கு நேற்று சென்ற அமைச்சர் ஓங், 20 மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக குறிப்பிட்டார்.
"பள்ளிக்கு வந்த சில மாணவர்களின் வீடுகளில் வைஃபை வசதி இல்லை. மற்ற சிலரின் பெற்றோர் வேலைக்குச் செல்கின்றனர். இதில் பல மாணவர்கள் கணினி அறைக்குச் சென்று இணைய வகுப்புகளில் பங்கேற்றனர். சிலர் வகுப்பறையில் அமர்ந்து வாசிப்பு, பயிற்சிகளை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்," என்றார் திரு ஓங்.
புதன்கிழமைகளில் தொடக்கப் பள்ளிகள், வியாழக்கிழமைகளில் உயர்நிலைப் பள்ளிகள், வெள்ளிக்கிழமைகளில் தொடக்கக் கல்லூரிகள் மற்றும் மில்லெனியா கல்வி நிலையம் என வாரம் ஒருநாள் வீட்டிலிருந்து கற்கும் நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பிள்ளைகள் வீட்டில் இருந்து கற்கும் நாட்கள் அதிகப்படுத்தப்படும்பட்சத்தில், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

