கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியவருடன் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய உதவும் ‘டிரேஸ் டுகெதர்’ எனும் விவேக கைபேசி செயலியை சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் இதுவரையில் பதிவிறக்கம் செய்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
இந்தச் செயலி சிறப்புடன் செயல்பட சிங்கப்பூர் மக்கள் அனைவரும் இல்லாவிட்டாலும் முக்கால்வாசிப் பேராவது பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் அதனை அடையாளம் கண்டறியும் சிறந்த சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.
ஒரு மில்லியன் என்பது சாதனை என்றாலும், தற்போதைய மக்கள் தொகையில் ஆறில் ஒருவர்தான் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பதிவிறக்கம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் புளூடூத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.