செங்காங்கில் உள்ள பாம் வியூ தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பள்ளி மாணவர்களுக்கு இன்றும் (ஏப்ரல் 2) வீட்டிலிருந்தே இணையம் வழி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமைக்குப் பிறகு அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லவில்லை; அப்போது அவர் நலமாக இருந்ததாக பெற்றோர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் அந்தப் பள்ளியின் முதல்வர் மிங் கும் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து அந்த மாணவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் வெளிநாடுகளுக்கு அண்மையில் பயணம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நேற்று முதல் 14 நாட்களுக்கு கட்டாய விடுப்பில் உள்ளனர்.
கிருமி நாசிகளைக் கொண்டு பள்ளி முற்றிலும் சுத்திகரிக்கப்படும் என்று குறிப்பிட்ட திருமதி கும், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களை நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரைப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்,
நாளை வெள்ளிக்கிழமை பள்ளி வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டது.