இந்தியாவில் நடந்த பெரிய அளவிலான இஸ்லாமிய சமயக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் அவர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மாநாட்டில் கலந்துகொண்டதை அந்த அமைப்புடன் தொடர்புடைய சமயப் பிரமுகர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
“தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினரில் சிங்கப்பூர் ஆடவரும் ஒருவர். அவர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்,” என்று மௌலானா அப்துல் அலீம் சையது என்ற அந்தப் பிரமுகர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
டெல்லியில் இருக்கும் தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட வெளிநாட்டினரில் அந்த சிங்கப்பூரரும் ஒருவர் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டு உள்ளன.
தப்லீக் ஜமாத் மாநாடு, இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதற்கு முன்னதாக, டெல்லியில் மார்ச் 13 தொடங்கி 15 வரை நடந்தது. அதில் கலந்துகொண்டவர்களில் 323 பேருக்கு கொரோனா கிருமித்தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுவரையில் ஏழு பேர் மாண்டு இருக்கிறார்கள். கிருமி தொற்றி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளவர்களில் 190 பேர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு சென்று இருக்கிறார்கள்.
புதுடெல்லி மாநாட்டில் இந்தோனீசியாவைச் சேர்ந்த சமயத் தலைவர்களும் கலந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் கொரோனா கிருமிகள் பரவி இருக்கின்றன என்று இந்திய அதிகாரிகள் நம்புகிறார்கள். மாநாடு முடிந்ததும் அதில் பங்கேற்றவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவிட்டார்கள்.
அவர்களை எல்லாம் கண்டுபிடிக்க அதிகாரிகள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். கொரோனா கிருமிப் பரவுவதைத் தடுக்க இந்தியா 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.