பெண்களின் உள்ளாடைகளைத் தொடர்ந்து திருடிய சந்தேகத்தில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெம்பனிசில் ஒரு புளோக்குக்கு அருகில் மார்ச் மாதம் 15ஆம் தேதி துணிகள் உலர்த்தப்பட்டிருந்த அலமாரிக்கு அருகில் ஆடவர் ஒருவர் பெண்கள் அணியும் மார்புக்கச்சைகளை (bras) எடுத்தபோது பிடிபட்டதாக ஸ்டோம்ப் முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஸ்டோம்ப் வாசகர் லிசா, அந்த ஆடவர் தம்முடைய மூன்று அத்தகைய உள்ளாடைகளைத் திருடிவிட்டார் என்றும் அவை $200 மதிப்பிலானவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தெம்பனிஸ் அவென்யூ 9ல் மார்ச் 15ஆம் தேதி, வீட்டுக்கு வெளியில் உலர்த்தப்பட்ட துணிகளிலிருந்து உள்ளாடைகள் திருடுபோனதாக போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை இரவு (ஏப்ரல் 2) போலிசார் தெரிவித்தனர்.
பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆடவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை (ஏப்ரல் 1) அன்று அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளில், அந்த ஆடவர் தெம்பனிசில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
பெண்கள் அணியக்கூடிய 2,500க்கும் அதிகமான உள்ளாடைகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டுக் குற்றங்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்படலாம்.
தெம்பனிஸ் மற்றும் பிடோக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது நடைபாதைகளில் உள்ளாடைகள் திருடப்பட்ட சந்தேகத்தின் கீழ் 27 வயதான ஆடவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.