சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதை அடுத்து இந்நாட்டில் தற்போது தங்கியுள்ள மலேசியர்களில் அதிகமானோர் தாயகம் திரும்புவர் என ஜோகூர் குடிநுழைவு துறை எதிர்பார்க்கிறது.
ஜோகூர் பாலத்திலுள்ள சுல்தான் இஸ்கண்டர் சுங்கச் சாவடி, இரண்டாம் இணைப்பிலுள்ள 'கொம்பிளெக்ஸ் சுல்தான் அபு பக்கார்' சாவடி ஆகியவற்றில் மலேசிய குடிமக்கள் பெருவாரியாக வருவர் என எதிர்பார்ப்பதாகவும் அதற்காகத் தயாராகி வருவதாகவும் மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைவர் திரு பகருடின் தாகிர் தெரிவித்திருக்கிறார்.
ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடையே நாடு திரும்பும் மலேசியர்களின் எண்ணிக்கை, மார்ச் 18 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் எனத் திரு பகருடின் தெரிவித்தனர். சிங்கப்பூரில் மலேசியர்கள் வேலை செய்வதில் எதிர்நோக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசிய ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கான உத்தரவு அவர்களுக்கு ரத்து செய்யப்படும் என்று மலேசியாகினி தெரிவித்தது. அவர்கள் சிங்கப்பூரில் சுவாப் சோதனை செய்துகொண்டு பின்னர் அந்தச் சோதனைக்கான சான்றிதழை மலேசியாவிற்குள் நுழையும்போது அதிகாரிகளிடம் காண்பிக்கவேண்டும்.