குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையக் ( ஐசிஏ) கட்டடத்தின் சேவை முகப்புகள், அவசர காரணங்களுக்காக ஏற்கெனவே முன்பதிவு செய்து வருவோருக்கு மட்டும் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் சேவையாற்றும். முன்பதிவு இன்றி வருவோர் கட்டடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்ய முகப்புகளில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அரசாங்க அமைப்புகள் குறைத்துவரும் வேளையில் ஆணையம் தனது மின்-சேவைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 7ஆம் தேதியன்றும் அதற்குப் பின்பும் ஆணையத்திற்குச் செல்ல ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் மே 4ஆம் தேதிக்குப் பிறகுதான் ஆணையக் கட்டடத்திற்குச் செல்ல முடியும். அத்துடன் புதிய முன்பதிவுகளை இனி ஆணையத்தின் மின் முன்பதிவுச் சேவைத்தளத்தில் செய்ய முடியாது. இதற்காகவே திறக்கப்பட்டுள்ள தனி இணையத்தளம் ஒன்றின் வழியாகத்தான் முன்பதிவுகள் செய்யப்படலாம். தங்களது முன்பதிவுகளுக்கான ஒப்புதல் கடிதங்களைப் பெற்றவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவர் என்றது ஆணையம். இந்தக் கடிதம் முன்பதிவு செய்த பின்னர் ஒரு வேலை நாளுக்குள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான பதிவு, அவசரமான குடியுரிமைப் பதிவு, அவசரமான அடையாள அட்டையை மாற்றுவது உள்ளிட்ட சில அவசர சேவைகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கலாம்.