சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (ஏப்ரல் 7) முதல் தொடர்கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் இணையம்வழி நடத்தப்படும். மே 4ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் இந்த நடைமுறை, அந்த நேரத்தில் கொரோனா நிலவரத்தைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்.
நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க சிங்கப்பூரில் பள்ளிகள், பெரும்பாலான வேலையிடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, நேரடியாக வகுப்புக்கு வந்து பாடம் கற்பதும் பயிற்சி பெறுவதும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு நேற்று தெரிவித்தது. குறிப்பிட்ட சில சூழலுக்கு மட்டும் இந்தப் புதிய நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அது கூறியது. அதாவது, மூன்று வகையான பாடங்களுக்கு மட்டும் இணையம்வழி கற்றலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
முதலாவதாக, கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கான தேசிய அளவிலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அவசரமாக பயிற்சி தேவைப்படுவது.
இரண்டாவதாக, கிருமித்தொற்று நிலவரத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, சில்லறை விற்பனை, உணவுச் சேவைகள், நிலப் போக்குவரத்து, கலை மற்றும் கலாசாரத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்காக பயிற்சி அளிப்பது.
மூன்றாவதாக, திறனுக்கேற்ற பணியமர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயிற்சி வழங்குவது.
நேரடியாக வகுப்புக்கு வந்து பயிற்சி பெற வேண்டியிருந்தால், அங்கு பங்கேற்பாளர்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளியைக் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, பங்கேற்பாளர்களை உச்ச நேரத்தில் பயணம் மேற்கொள்ள வைக்கக்கூடாது.
.