உள்ளூரில் தொடர்ந்து பரவும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிக்கும் செய்தி என்றாலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும் அதனால்தான் நாளை மறுநாள் முதல் நடமாட்டக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகிறது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
வேலையிடங்களுக்குச் செல்லாமலும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றும் அனைவரும் பாதுகாப்பு இடைவெளி சட்டங்களைப் பின்பற்றி நடந்தால் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய சாத்தியம் உண்டு என்று அவர் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டை அனைவரும் பின்பற்றினால்தான் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் பலன் அளிக்கும் என்றார் அவர்.
“வீட்டிலேயே இருங்கள். வெளியே செல்லவேண்டும் என்றால் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அனைவரின் சுகாதாரமும் ஒவ்வொருவரின் செயலைச் சார்ந்து உள்ளது என்று கூறிய பிரதமர் லீ, அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.