கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்கள் வேலையிடங்களுக்குச் செல்லாதபடி உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூரின் சுகாதார அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
கடந்த வாரயிறுதியில் சுகாதார ஊழியர்கள் அறுவருக்கு இந்நோய் ஏற்பட்டது குறித்து அக்கறைகள் எழுந்துள்ள இவ்வேளையில் பேராசிரியர் மாக் இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று அறவிக்கப்பட்ட 75 புதிய கொரோனா நோயாளிகளில் நால்வரும் நேற்று அறிவிக்கப்பட்ட 120 புதிய நோயாளிகளில் இருவரும் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் அடையாளப்படுத்தப்பட்ட முதல் சுகாதார ஊழியர், கே கே மகளிர் சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த 35 வயது மருத்துவர் என்றது சுகாதார அமைச்சர். தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டாவது நபர் இங் டெங் போங் பொது மருத்துவமனையில் தொழில்நுட்பராகப் பணியாற்றும் இந்தியக் குடிமகன். அவர் தற்போது அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.