சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களுக்குப் பொதுமக்கள் செல்வதற்கு முன்பாக அங்குள்ள கூட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வகைசெய்யும் இணையத்தளம் ஒன்றை தேசிய பூங்காக் கழகம் தொடங்கியுள்ளது.
பூங்காக்களுக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய விரும்புவோர், தாங்கள் செல்ல விரும்பும் பூங்காக்களில் ஆக அண்மைய கூட்ட நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இந்த ஏற்பாடு உதவும்.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள் நடப்புக்கு வந்த மூன்றாவது நாளான நேற்று, உடற்பயிற்சி செய்வதற்காக மக்கள் பூங்காக்களுக்குச் சென்றனர்.
பூங்காக்களிலும் இயற்கை வனப்பகுதிகளிலும் கூட்டத்தைத் துல்லியமாக கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளை தேசிய பூங்காக் கழகம் பயன்படுத்துகிறது.
"பெரிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்களிலும் இயற்கை வனப்பகுதிகளிலும் கூட்டத்தைக் கண்காணிக்க 30 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன," என்று தேசிய பூங்காக் கழகத்தின் பூங்கா, பொழுதுபோக்குப் பிரிவு ஆணையர் லியோங் சீ சியூ தெரிவித்தார்.
பீஷான்-அங் மோ கியோ பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி உள்ளிட்டவை அந்தப் பூங்காக்களில் அடங்கும்.
உயரத்திலிருந்து ஆளில்லா வானூர்திகள் எடுக்கும் புகைப் படங்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது. பூங்காக்களில் மக்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளியை உறுதிசெய்ய அதிக கூட்டம் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று டாக்டர் லியோங் சொன்னார்.
பூங்காக்களில் கூட்டத்தை அறிய மேல் விவரங்களுக்கு https://safedistparks.nparks.gov.sg எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.

