சிங்கப்பூரில் மேலும் ஒரு தாதிமை இல்லம் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
வேன்கார்ட் ஹெல்த்கேரின் உட்லண்ட்ஸ் கேர் ஹோம் தாதிமை இல்லத்தில் வசிக்கும் 77 வயது முதியவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதும் அவர் கூ தெக் புவாட் மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட உட்லண்ட்ஸ் ஹோம் தாதிமை இல்லத்துக்கு ஆதரவு வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுவதாக ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான முகவை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் உட்லண்ட்ஸ் கேர் ஹோம் தாதிமை இல்லத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் தங்கிய வார்டும் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அந்தத் தாதிமை இல்லத்தில் 248 படுக்கைகள் உள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள அந்த முதியவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்களில் தாதிமை இல்லத்தின் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அந்தத் தாதிமை இல்லத்தில் மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஒன்றும் இருக்கிறது. அது தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் சேவைகளைப் பெறுவோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

