கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பிலுள்ள இந்தக் காலகட்டத்தில் எதைச் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி இன்னும் உங்களுக்குக் குழப்பம் இருக்கிறதா? அதன் தொடர்பில் பலரும் கேட்கும் ஒரு சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன.
கேள்வி: நான் விவாகரத்து ஆனவன்/ஆனவள். பிள்ளைகளை நானும் என் முன்னாள் மனைவியும்/கணவனும் மாறி மாறி பார்த்துக்கொள்கிறோம். இந்த ஏற்பாட்டைத் தொடரலாமா?
பதில்: தொடரலாம். ஆயினும், சாத்தியமிருந்தால் பிள்ளைகளை மாறி மாறி அனுப்புவதையும் நடமாட்டத்தையும் அல்லது போக்குவரத்தையும் முடிந்த அளவிற்குக் குறைத்துக்கொள்ளவும்.
கேள்வி: என் வீடு மிகச் சிறியது. எங்களில் பலரும் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்கிறோம். அதனால், அதிக இடவசதி கொண்ட எங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் மாறி மாறிச் சென்று இருக்கலாமா?
பதில்: கூடாது. இந்தக் காலகட்டத்தில் ஒரே வீட்டில் வசிக்காத குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்றுகூடலாகாது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. முதல்முறை விதிமீறினால் $300 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
கேள்வி: வேறு வீட்டில் வசிக்கும் என் காதலன்/காதலியை அல்லது நான் மணமுடிக்க உள்ளவரை அல்லது என் கணவனை/மனைவியை அல்லது என் உடன்பிறந்தவரைச் சந்திக்கலாமா?
பதில்: கூடாது. இந்தக் காலகட்டத்தில் தொடர்பில் இருக்க காணொளி அல்லது தொலைபேசி அழைப்புகள் போன்ற மின்னிலக்க வசதிகளைப் பயன்படுத்துங்கள்.
கேள்வி: பதிவு செய்யப்பட்ட முகவரியில் மட்டுமே நான் இருக்க வேண்டுமா?
பதில்: நீங்கள் வழக்கமாக இருக்கும் முகவரியில் மட்டுமே தங்கி இருக்கவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தங்குமிட வசதிகள் இருந்தாலும்கூட அங்குமிங்கும் செல்லக்கூடாது.
கேள்வி: பொது இடங்களில் வேறு ஒருவர் என்னருகில் வந்தால் (ஒரு மீட்டர் இடைவெளிக்குள்) என்ன செய்வது? நான் தண்டிக்கப்படுவேனா?
பதில்: பொது இடங்களில் மற்றவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவுக்குத் தள்ளி இருங்கள். ஒவ்வொரு சம்பவத்திலும் உண்மைகளை அமலாக்க அதிகாரிகள் கவனமாக மதிப்பிடுவர். மோசமான விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தனிநபர்கள் எங்கு சாப்பிடலாம்?
பதில்: அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்பில்லாதோர் வீட்டில் சாப்பிடவேண்டும்.
உணவுக் கடைக்காரர்களும் காப்பிக் கடைக்காரர்களும் தங்கள் கடைகளுக்கு முன்பாக உள்ள மேசைகளில் வைத்து தனியாகவோ அல்லது குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்தோ சாப்பிடலாம். மேசைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய ஊழியர்கள் தங்களுடைய வேலையிடங்களில் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பான இடைவெளி விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
விநியோக சேவை போன்ற அங்குமிங்கும் செல்ல வேண்டிய வேலையைச் செய்வோர் உணவருந்த வேண்டுமெனில் தங்களது அலுவலகங்களுக்கு அல்லது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அது சாத்தியமில்லை எனில், தங்களது வாகனங்களில் இருந்தபடி அல்லது வெற்றுத் தளங்கள், பூங்கா மேசைகள் போன்ற பொது இடங்களில் அமர்ந்து சாப்பிடலாம். ஆயினும், கீழ்க்கண்ட விதிமுறைகளை அவர்கள் பின்பற்றவேண்டும்:
தனியாக அல்லது மற்றவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவு தள்ளி இருந்தபடி சாப்பிடவேண்டும்.
உணவருந்துவதை விரைவாக முடித்துக்கொள்ள வேண்டும்; சுத்தத்தைப் பேணவேண்டும்.
அத்தியாவசிய சேவை மற்றும் குறிப்பிட்ட சேவை ஊழியர்கள் என்பதற்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
தகவல்: சுற்றுப்புற, நீர்வள அமைச்சு

