மூத்த ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக முதியவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அரசாங்கம் ஆலோசனை கூறி வருகிறது. அதேநேரத்தில், மூத்த ஊழியர்கள் பலரும் தொடர்ந்து வேலை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இன்னமும் வேலைக்குச் சென்றுவருகிறார்கள்.
இந்த இரண்டுக்கும் இடையில் நிலவக்கூடிய முரண்பாடு பற்றி அமைச்சரிடம் கேட்டபோது அமைச்சர் முதலாளிகளுக்குச் சில கோரிக்கைகளை விடுத்தார். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள முதிய ஊழியர்கள், வெளியிடங்களில் வேலை செய்வதால் கவலை அடைகிறார்கள். ஆகையால் முதலாளிகள் அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொலைத்தொடர்பு ஏற்பாடுகள் சரிவராத நிலையில் மற்றவர்களுடன் அணுக்கமாகக் கலந்துறவாட வேண்டிய தேவை இல்லாத வேலைகளில் இத்தகைய ஊழியர்களை முதலாளிகள் பிரித்துவிடவேண்டும் என்று அமைச்சர் சுட்டினார். இப் படிச் செய்ய முடியாதபோது, முதிய ஊழியர்களுக்குப் போதிய அளவுக்குப் பாதுகாப்பு இருப்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் முகக்கவசம் கிடைக்கச் செய்யவேண்டும்.
ஒரு மீட்டர் பாதுகாப்பு நியதி கடைப்பிடிக்கப்படும் சூழலில் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் புதிய நிபந்தனைகள் பற்றிய தகவல்கள் மூத்த ஊழியர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருவாட்டி டியோ தெரிவித்தார். முதலாளியும் ஊழியரும் ஓர் உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால் அந்தச் சூழலில் என்ன செய்யலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
ஊழியர் தன் விடுப்புகளைச் சம்பளத்தடன் எடுக்கலாம். விடுப்பு எதுவும் இல்லை எனில் முதலாளியும் ஊழியரும் புதிய ஏற்பாடுகளைக் காணலாம். சம்பளம் இல்லா விடுப்பு போன்ற அம்சங்கள் அடங்கிய கருத்திணக்கத்துக்கு இருவரும் உடன்படலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தங்கள் ஊழியர்களின், குறிப்பாக முதிய ஊழியர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் போக்க முதலாளிகள் முன்வரவேண்டியது முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

