கொரோனா கிருமி உலகம் முழுவதும் பரவி மனித உயிர்களுக்கு மிரட்டலாக விளங்கி வருகிறது.
இதுவரை அந்த கிருமியால் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக முழுவதும் 134,000 பேர் கிருமிக்குப் பலியாகிவிட்டனர்.
சிங்கப்பூரில் 24 மணி நேரத்தில் புதிதாக 447 பேருக்கு கிருமித்தொற்று காணப்பட்டதாக புதன்கிழமை அன்று சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இந்தச் சூழ்நிலையில் கொரோனா கிருமிக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நிறுவனங்கள் போட்டி போட்டு இயங்கி வருகின்றன.
சிங்கப்பூரும் இந்தப் போட்டியில் இறங்கி தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் முன்னேறி வருகிறது.
சிங்கப்பூரின் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆர்க்டுரஸ் தியரபியுடிக்சும் தடுப்பூசிக்கான ஆய்வுகளில் ஈடுபட்டு அடுத்த கட்ட சோதனைக்கு அடியெடுத்து வைத்துள்ளன.
அதாவது தடுப்பூசியை மனிதர் களிடம் பரிசோதிப்பதற்கு முன்பு விலங்குகளிடம் சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சோதனைகளில் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பது உறுதியானால் மட்டுமே பின்னர் மனிதர்களிடம் சோதிக்கப்படும்.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் கிருமி நோய்த் தொற்று திட்டத்தின் துணை இயக்குநரான பேராசிரியர் ஊய் எங் இயோங், ஆகஸ்டு மாதத்தில் மனிதர்களிடம் கொரோனா கிருமி தடுப்பூசி சோதிக்கப்படலாம் என்றார்.
சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிக்கான உரிமை சிங்கப்பூரிடம் இருக்கும். அதே சமயத்தில் அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே உலகில் மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருவதாகவும் 67 ஆய்வு நிைலயங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி விலங்குகளிடம் சோதிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

