'தங்கும் விடுதிகளில் கிருமி பற்றிய வாசகர் கடிதம் வெறுப்புணர்வைக் காட்டுகிறது'

2 mins read

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கும்­வி­டு­தி­களில் ஏற்­பட்­டுள்ள கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­கும் ஊழி­யர்­க­ளின் தனிப்­பட்ட சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­கள் மற்­றும் வாழ்க்­கை­மு­றைக்­கும் தொடர்­புள்­ள­தாக வாச­கர் எழு­திய கடி­தம் ஒன்று 'சாவ்­பாவ்' நாளி­த­ழில் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வெளி­யா­னது. குறிப்­பிட்ட ஒரு சாரா­ருக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டு­வ­தாக கடி­தம் உள்­ளது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தார்.

இங்கு வெளி­நாட்டு ஊழி­யர் களி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏன் ஏற்­பட்­டது என்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு அக்­க­டி­தத்­தில் இல்லை என்று அவர் கூறி­னார்.

நாளி­த­ழுக்­குக் கடி­தம் எழு­தி­யி­ருந்த வாச­கர் லீ ஷிவான், தங்­கும் விடு­தி­களில் கிரு­மிப் பர­வல் ஏற்­ப­டு­வ­தற்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களே கார­ணம் என்­றும் ஒன்­றா­கக் கூடிக்­கொண்டு தனிப்­பட்ட சுகா­தா­ரத்­தைப் பேணா­மல் இருக்­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார். பின்­தங்­கிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் 'கைக­ளால் சாப்­பி­டு­வது, மரத்­த­டி­யில் சாப்­பி­டு­வது' போன்ற பழக்க வழக்­கங்­க­ளை­யும் கொண்­டு­வ­ரு­வ­தாக வாச­கர் கூறி­யி­ருந்­தார்.

கடந்த சில நாட்­க­ளாக நாட்­டின் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை தங்­கும் விடு­தி­களில் ஏற்­படும் சம்­ப­வங்­க­ளாக உள்­ளன. எண்­ணிக்­கை­யும் நூற்­றுக்­க­ணக்­கில் பதி­வாகி வரு­கின்­றன. வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூ­கச் சூழ­லில் வசிப்­ப­தால் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கின்­ற­னவே தவிர ஒரு­வ­ரது தனிப்­பட்ட சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­கள் அல்ல என்று 'சாவ்­பாவ்' சீன செய்­தித்­தா­ளி­டம் அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

"பல­ரை­யும் ஒரே இடத்­தில் வசிக்­கச் செய்து, ஒரே அறை­யில் உறங்­க­விட்டு, கூட்­டுச் சமை­ய­லில் ஈடு­ப­டச் செய்து, நீண்ட நேரத்­திற்கு அரு­க­ருகே இருக்க விட்­டால், கிரு­மித்­தொற்று பெரு­ம­ள­வில் ஏற்­ப­டு­வது நிச்­ச­யம். வீடு­களில் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வது போன்­ற­து­தான் அது," என்­றார் அமைச்­சர்.

அத்­து­டன் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் குறை­கூ­றா­மல் இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றா­கத் திரண்டு வர­வேண்­டும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­து­டன் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் மற்­றும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளின் கட்­டு­மான பணி­களில் வெளி­நாட்டு ஊழி­யர் களின் பங்கு உள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் கனி­வன்பு, கருணை, தாராள குண­மு­டை­ய­வர்­கள் என்று கூறிய அமைச்­சர் சண்­மு­கம், "கடி­தத்­தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தைக் காட்­டி­லும் நாம் சிறந்த, மேலான பண்­பு­கள் உடை­ய­வர்­கள்," என்­றார்.