உட்லண்ட்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி லாரி ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்த 67 வயது மலேசியர் ஒருவர், அந்த வழியாக சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியதற்கு, அவர் கட்டுப்பாட்டை இழந்தது காரணமாக இருக்கலாம் என மரண விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த லாரி ஓட்டுநருக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த அந்த விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான 53 வயது லூங் சோய் யின் உயிரிழந்ததாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் கூறினார். விமன் பப்போர் என்ற அந்த லாரி ஓட்டுநர் இயற்கை காரணங்களால் இறந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியர்களான இருவரும் வேலைக்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு வந்தனர். அப்பர் புக்கிட் தீமா ரோட்டை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் ரோடு சாலைச் சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான திரு சோங் கிம் லூன் உயிர்பிழைத்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த திரு விமன், பெரும்பாலான நாட்களுக்கு மலேசியாவின் சிரம்பான் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு லாரியை ஓட்டிச் சென்றதாக அவரது மருமகன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த திரு லூங், ஜோகூரைச் சேர்ந்தவர்.

