ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முதலாளிகள் தங்கள் வேலை ஆதரவுத் திட்ட வழங்கீடுகளைப் பயன்படுத்தவில்லை என்ற புகார்களை மனிதவள அமைச்சு விசாரிக்கும்.
கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள மந்தநிலையின்போது தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் அல்லது அவர்களை சம்பளமில்லா விடுப்பில் வைத்திருக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்த தவணைகளில் குறைந்த வழங்கீடுகளையே பெறும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்கால வழங்கீடுகள், தள்ளுபடிகளை ரத்து செய்வது அல்லது வொர்க் பாஸ் சலுகைகளை குறைப்பதன் மூலமாகவோ தவறிழைக்கும் முதலாளிகள் தண்டிக்கப்படுவர் என அது குறிப்பிட்டது.
தொற்றுநோய் முறியடிப்பு காலத்தில் பல நிறுவனங்கள் ஊழியருக்கு சம்பளம் வழங்கவில்லை என அமைச்சுக்கு தகவல் கிடைத்திருப்பதாக அது கூறியது.
முதலாளிகளே சிரமமான காலத்தை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அமைச்சு உணர்கிறது. ஆனால், ஊழியர்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களை ஈடுபடுத்தாமல், சம்பளமில்லா விடுப்பை நீட்டிப்பதோ அல்லது சம்பளத்தை சேமிக்க வேறு நடவடிக்கைகளை எடுப்பதோ ஏற்றக்கொள்ளக்கூடியதல்ல. இத்தகைய நடவடிக்கைகளை அமைச்சிடம் தெரிவித்தால், வேலையிலிருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றது அமைச்சு.
மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 1.9 மில்லியன் உள்ளூர் ஊழியர்களின் வேலைகள் தக்கவைக்கப்பட, ஏப்ரல் மாதம் சம்பளத்தில் முதல் $4,600 தொகையில் 75% அரசாங்கம் வழங்கும்.
அத்துடன் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளங்களைத் தொடர்ந்து வழங்கவேண்டும் என்பதையும் அமைச்சு முதலாளிகளுக்கு நினைவூட்டியது. மே 1ஆம் தேதி வேலையில் இருக்கும் ஒவ்வொரு எஸ்பாஸ் அல்லது வொர்க் பர்மிட்டில் வேலை பார்க்கும் ஊழியருக்கும் $750 வெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவு வழங்கப்படும்.
தகுந்த புகார்கள் விசாரிக்கப்படும் என்றும் விசாரணைகள் முடியும் வரை அந்த நிறுவனங்களுக்கான வேலை ஆதரவுத் திட்டம் அல்லது வெளிநாட்டு ஊழியர் தீர்வை வழங்கீடுகள் நிறுத்தி வைக்கப்படலாம் என்று அமைச்சு தெரிவித்தது.

