கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் வாகன ஓட்டுநர்கள் இரண்டு பேர், பயணிகள் பகிர்வுச் சேவையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அந்த இரண்டு ஓட்டுநர்களும் இயோ சூ காங் ரோட்டிலும் ஹேண்டி ரோட்டிலும் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்றினர்.
வாடகை வாகனத்தில் பயணிகள் பலர் சேர்ந்து செல்ல போக்குவரத்து அமைச்சு சென்ற வாரம் தடை விதித்தது. அத்தகைய சேவைகளை இப்போது யாராவது வழங்கினால் அவர்களுக்கு $10,000 வரை அபராதம் மற்றும் அல்லது ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும். வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன என்றாலும் சில வாகன ஓட்டுநர்கள் தனிப்பட்ட முறையில் குறுஞ் செய்தி வாயிலாக சேவைகளை வழங்குகிறார்கள்.
தனியார் கார்களை பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல கட்டணம் வசூலித்தால் அப்படி செய்யும் வாகன ஓட்டுநர்கள் கார் பகிர்வு சேவையை வழங்குபவர்களாக கருதப்படுவார்கள். இதனிடையே, கட்டுப்பாட்டு நிபந்தனைகளை மீறாமல் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு வாகன ஓட்டுநர்களையும் பயணிகளையும் ஆணையத்தின் போக்கு வரத்து, சாலை செயலாக்கப் பிரிவின் இயக்குநர் சந்திரசேகர் பழனிசாமி வலியுறுத்தினார்.

