இவ்வாண்டு சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி முன்னுரைக்கப்பட்டதைவிட குறையக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 4 விழுக்காடு வரை குறையும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வேளையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொருளியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் இந்தப் பொருளியல் நிலையை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இவ்வாண்டு இரண்டாம் பாதியில் நாட்டின் பொருளியல் படிப்படியாக மீளும் பட்சத்தில் இந்த வளர்ச்சி விகிதம் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறுகியகால பொருளியல் வளர்ச்சி நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
உலகளவில் கொவிட்-19 கிருமித்தொற்று எவ்வளவு விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதைப் பொறுத்து நாட்டின் பொருளியல் வளர்ச்சி அமையும் என்று ஆணையம் விவரித்தது.
"உலகளாவிய நிதிச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்தால் முதலீட்டாளர் நம்பிக்கை சரியும். இதன் விளைவாக, நாட்டின் பொருளியலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்," என்றும் ஆணையம் கூறியது.
இந்நிலையில், சிங்கப்பூர் பொருளியல் ஆக மோசமான மந்தநிலையைச் சந்திக்கும் என்று நாட்டில் முன்னணி வகிக்கும் மூன்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 4 முதல் 10 விழுக்காடு வரை குறையும் என அவை முன்னுரைத்துள்ளன. வேலையிழப்பு விகிதமும் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டும் என்று அந்த வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
2003ஆம் ஆண்டில் 'சார்ஸ்' கிருமித்தொற்றுடன் ஒப்பிடுகையில், கொவிட்-19 தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவது சிரமம் என்பதை நாணய ஆணையம் சுட்டியது. காரணம், மிக வேகமாகப் பரவும் கிருமியாக கொவிட்-19 உள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பயனீட்டாளர்களும் தொழில் நிறுவனங்களும் செலவினத்தைக் குறைக்கக்கூடும்.
இதனால், பொருளியல் வளர்ச்சி படிப்படியாகத்தான் மீளக்கூடும்.
வெளிநாடுகளிலிருந்து இங்கு உள்ள பொருட்களுக்கான தேவை குறைந்திருப்பதால், சிங்கப்பூரின் வர்த்தகம் தொடர்பிலான துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மந்தமாக உள்ளன.
எனினும், எந்தத் துறை என்பதைப் பொறுத்து, அதன் பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கக்கூடும்.
இவ்வாண்டு ஆட்குறைப்பு எண்ணிக்கை 45,600ஆக அதிகரிக்கக்கூடும் என்று டிபிஎஸ் வங்கி முன்னுரைத்துள்ளது.
இதற்கு முன்பு ஏற்பட்ட மந்தநிலையில் பதிவாகியிருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கையைவிட இது கணிசமாக அதிகம். வேலை இழப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்களாக இருப்பர் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

