சுயதொழில் செய்வோர், அரசாங்க நிவாரண நிதியைப் பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையப்பக்கம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) இணையப்பக்கம் செயல்படத் தொடங்கிய முதல் நாளான நேற்று முன்தினம், அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் அது முடங்கியது.
அதைத் தொடர்ந்து, இணையப்பக்கத்தில் வரிசை முறை ஒன்றைச் சேர்ப்பதற்காக அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்க என்டியுசியின் சுயதொழில் செய்வோருக்கான பிரிவு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டது.
எனினும், இணையப்பக்கம் எப்போது மீண்டும் செயல்படத் தொடங்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அரசாங்க நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க தற்போது காலக்கெடு எதுவும் இல்லை என்று பயனீட்டாளர்களுக்கு என்டியுசி உத்தரவாதம் அளித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக வருமானம் இழந்து தவிக்கும் சுயதொழில் செய்வோருக்கு உதவும் நோக்குடன் கடந்த மாதம் 26ஆம் தேதி அரசாங்க நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. நிவாரண நிதிக்குத் தகுதி பெறுவோருக்குப் படிப்படியாக ஒன்பது மாதங்களுக்கு $9,000 வழங்கப்படும்.

