சிங்கப்பூரின் ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, தனது டாக்சி ஓட்டுநர்களுக்கு வாடகைக் கழிவை நீட்டித்து உள்ளது. எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இதேபோன்று ஜூன் 1ஆம் தேதி வரை வாடகைக் கழிவை நீட்டித்துள்ளதாக அறியப்படுகிறது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கைகளை ஜூன் 1ஆம் தேதி வரை அரசாங்கம் நீட்டித்துள்ளதால் டாக்சி நிறுவனங்களும் வாடகைக் கழிவை நீட்டிக்க முன் வந்துள்ளன. அதிரடி நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த முதல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு டாக்சிக்கு $100 வரை வாடகையில் கழிவு வழங்குவதாக அனைத்து டாக்சி நிறுவனங்களும் அறிவித்திருந்தன.
இம்மாதம் 22ஆம் தேதி அதிரடி நடவடிக்கைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததும், கம்ஃபர்ட் டெல்குரோ தனது வாடகைக் கழிவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாகக் கூறியது.
இந்நிலையில், கம்ஃபர்ட்டெல்குரோவின் சலுகையை தாங்களும் பின்பற்றப்போவதாக மற்ற டாக்சி நிறுவனங்கள் கூறியிருந்தன.
ஆனால், இரண்டாவது ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான டிரான்ஸ்கேப், மே 6ஆம் தேதியிலிருந்து ஜூன் 1ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு $21.40 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை கூறியது.
இதனால் டாக்சி ஓட்டுநர்களிடையே சர்ச்சை வெடித்துள்ளது.
"இது நியாயமே இல்லை, கம்ஃபர்ட்டெல்குரோ வாடகையில்லாமல் சலுகை வழங்கும்போது டிரான்ஸ்கேப் நிறுவனத்தால் ஏன் முடியவில்லை," என்று டாக்சி ஓட்டுநர்களில் ஒருவரான 62 வயது லோ சூன் மின் கேள்வி எழுப்பினார்.
மற்றொரு டிரான்ஸ்கேப் ஓட்டு நரான 52 வயது டாய் சூன் வாய், "தற்போது ஆபத்தாக இருப்பதால் டாக்சி ஓட்ட வேண்டாம் என்று என்னுடைய குடும்பத்தினர் கூறு கின்றனர். ஆனால் பிழைப்புக்காக பணம் சம்பாதித்தாக வேண்டுமே," என்றார் அவர்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த டிரான்ஸ்கேப்பின் பொது நிர்வாகியான ஜாஸ்மின் டான், வாடகையே இல்லாமல் சலுகை வழங்குவது கட்டுப்படியாகாது என்றார்.
"தற்போதுள்ள சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம், தேவை ஏற்பட்டால் படிப்படியாக உதவிகளை செய்வோம்," என்று அவர் மேலும் தெரி வித்தார்.
பிரிமியர் டாக்சிஸ், பிரைம் டாக்சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை நீட்டிக்கப்பட்ட பிறகு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால் பிரைம் டாக்சி நிறுவனத் தலைவர் நியோ நாம் ஹெங், டிரான்ஸ்கேப் வாடகைக் கட்டணத்தைத் தாங்களும் பின்பற்றப் போவதாகத் தெரிவித்தார்.

