சிங்கப்பூரில் டாக்சி சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, டாக்சி ஓட்டுநர் களுக்கு உதவும் வகையில் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கியுள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கைகளை ஜூன் 1ஆம் தேதி வரை அரசாங்கம் நீட்டித்துள்ள இந்த நேரத்தில் கம்ஃபர்ட்டெல்குரோவின் இந்த அறிவிப்பு, டாக்சி ஓட்டுநர்களுக்கு சற்று நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.
பயணிகளின்றி குறைந்த வருவாய் ஈட்டும் டாக்சி ஓட்டுநர்கள் இந்தத் திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறுவர். கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்துக்குச் சொந்தமான ஏறக்குறைய 10,000 வாடகை உந்துவண்டிகள் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. உணவு, பானக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பண்டங்களை இந்த டாக்சி மூலம் அனுப்பிவைப்பர். இந்த உணவு விநியோகச் சேவை காலை 9 மணி முதல் இரவு 10 வரை நடப்பில் இருக்கும்.
கடந்த வியாழக்கிழமை 'த பெர்னாக்கன்', 'த ஸ்ட்ரெய்ட்ஸ் கிளான்'ஸ் கின்' ஆகிய உணவகங்களுடன் இணைந்து கம்ஃபர்ட்டெல்குரோ முன்னோட்டச் சேவை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த உணவு விநியோகச் சேவைக்கு தூரத்தைப் பொறுத்து, கட்டணம் $6.50ல் இருந்து வசூலிக்கப்படும். ஒரே பதிவில் இரண்டு இடங்களுக்குச் சேவையாற்ற வேண்டுமெனில் தூரத்தைப் பொறுத்து கட்டணம் $8.50 முதல் வசூலிக்கப்படும்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் செயலி மூலம் ஓட்டுநர்கள் தங்களுக்கான உணவு விநியோகச் சேவையைப் பெறுவர். மற்ற நிறுவனங்களின் உணவு விநியோகச் சேவையைப் போல் அல்லாமல் டெல்குரோவின் இந்தச் சேவையின் மூலம் ஈட்டப்படும் வருமானம் யாவும் டாக்சி ஓட்டுநர்களுக்கே போய்ச் சேரும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

