சிங்கப்பூர் நாடாளுமன்றம் வரும் ஜனவரி மாதம் கலைக்கப்பட வேண்டியுள்ளதால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு அதிக கால அவகாசமில்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து புளூம்பெர்க் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ேநற்று முன்தினம் அளித்த பேட்டியில், “பொதுத் தேர்தலுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அதிக கால அவகாசம் இருப்பதாக பலர் நினைக்கின்றனர்.
“கணக்குப்படி பார்த்தால் அது சரிதான். ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் இடம்பெற்றதால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம், அது கலைக்கப்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
இதனால் இதில் அதிக கால அவகாசம் இல்லை என்று அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
“எனவே, அடுத்த வாய்ப்பு வரும்பொழுது ஒரு வலுவான ஆட்சி உரிமையைப் பெற நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், இனி வரும் காலங்களில் நம் நாடு சந்திக்கக்கூடிய சவால்கள் ஒரு தலைமுறைக்கான சவால்கள்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் 29,000ஐ தாண்டிவிட்டன. ஆசியாவிலேயே அதிக கிருமித்ொற்று உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மேலும் பல வர்த்தகங்கள் செயல்படலாம் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதற்குக் காரணம் சமூக அளவில் கிருமிப் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதும்தான்.
தேர்தல் என வந்தால் சிங்கப்பூரர்கள் ஒரு முக்கிய நிகழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களிக்க மாட்டார்கள், மாறாக, நீண்டகால அடிப்படையில் அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதைக் கருத்தில்ெகாண்டே வாக்களிப்பர் என்றும் அவர் கூறினார்.
“நாம் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாக, நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொண்டு வலுவாக மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்.
“இந்த அடிப்படையிலேயே நாங்கள் தேர்தலை சந்திப்போம். இந்த அடிப்படையில்தான் சிங்கப்பூரர்களும் எங்களை இதுநாள் வரை எடைபோட்டு வந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஆளும் மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் துணைத் தலைமைச் செயலாளருமான சான் சுன் சிங் விவரித்தார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 1965ஆம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இன்னும் பிரபலமாக உள்ள இக்கட்சி, கடந்த 2015 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடித்தது.
முன்னதாக, நாடாளுமன்றம் இம்மாதம் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
அதன்படி, கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் தேர்தல் நடைபெறுமானால், வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு ஏதுவாக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள் தங்கள் வாக்களிப்பு வட்டாரங்களுக்கு அப்பால் சென்று வாக்களிக்கலாம்.
இதேபோல், வேட்பாளர்கள் தங்கள் சார்பாக வேறொருவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவும் அனுமதிக்கலாம்.