ஓய்வுநாட்களிலும் பணிப்பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

ஓய்வுநாட்களிலும் பணிப்பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

2 mins read
7287b60d-0b99-4041-af9f-544eead5df4a
ஜூ 2ஆம் தேதியிலிருந்து பணிப்பெண்கள் தங்கள் ஓய்வுநாட்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. படம்: எஸ்டி - ஜின் டே -

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து பணிப்பெண்கள் தங்கள் ஓய்வுநாட்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளைத் தளர்த்த சிங்கப்பூர் எடுக்கவிருக்கும் முதல் கட்ட நடவடிக்கையின்போது சிங்கப்பூரில் உள்ள மற்றவர்களைப் போலவே பணிப்பெண்கள் தங்கள் நண்பர்களைச் சந்திக்கவும் பொது இடங்களில் கூடவும் கூடாது.

அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து குறைந்தது ஒரு மாதத்துக்கு பணிப்பெண்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றி மனிதவள அமைச்சு முதலாளிகளுக்கு விவரங்களை அனுப்பியுள்ளது. இக்காலகட்டத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கும் உணவு வாங்கவும் பணிப்பெண்கள் வெளியே செல்லலாம். ஆனால் அவர்கள் அதன் பிறகு உடனடியாக வீடு திரும்பிவிட வேண்டும்.

ஓய்வுநாட்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியே செல்ல விரும்பும் பணிப்பெண்கள் வாரநாட்களில் மட்டுமே அவ்வாறு செய்யலாம். வெளியே செல்லும்போது அவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது பாதுகாப்பான தூர இடைவெளியை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவேளை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் அவர்கள் தொடர்பில் இருந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காண அவர்கள் TraceTogether செயலியை தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செல்லும் இடம் குறித்து பணிப்பெண்கள் தங்கள் முதலாளிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு அனுப்பியுள்ள கடிதங்களில் பணிப்பெண்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி பணிப்பெண்களுக்கு விளக்கிக் கூறுவது முதலாளிகளின் கடமை என்று அமைச்சு கூறியது. ஓய்வுநாட்களில் வெளியே செல்ல பணிப்பெண் விரும்புகிறாரா என்பது குறித்து அவருடன் கலந்துரையாடி பரஸ்பர முடிவுக்கு வரும்படி அமைச்சு முதலாளிகளைக் கேட்டுக்கொண்டது.

பணிப்பெண்களுக்கு அவர்களது வாராந்தர ஓய்வுநாட்கள் வழங்கப்பட வேண்டும். ஓய்வுநாட்களின்போது அவர்களை வேலை செய்யச் சொல்லக்கூடாது. ஓய்வுநாட்களில் பணிப்பெண்கள் வேலை செய்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் தங்கள் முதலாளியின் வீட்டிலிருந்து ஓடிப்போகும் பணிப்பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக சமுதாய ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சங்கம் தெரிவித்ததை அமைச்சு சுட்டியது.

இணையம் மூலம் பணம் அனுப்பும் முறையைப் பணிப்பெண்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறு முதலாளிகளிடம் அமைச்சு கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் சொந்த நாடுகளில் இருக்கும் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்ப பணிப்பெண்கள் வெளியே செல்ல தேவை ஏற்படாது என்று அமைச்சு தெரிவித்தது.

மேலும், பணிப்பெண்களுக்குப் பயன் தரும் இணையம் வழி நடவடிக்கைகளில் ஈடுபட முதலாளிகள் அவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.