வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பத் தொடங்குவர். அப்போது பள்ளிக்குச் செல்வது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்ட நாட்களன்று அந்தந்த நிலையைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி திரும்ப வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் தங்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போவது குறித்துப் பெற்றோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு தம் ஃபேஸ்புக் பதிவில் பதிலளித்தார்.
பள்ளிக்குள் வரும் அனைவரும் சுகாதாரப் பரிசோதனை, நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள், பாதுகாப்பான இடைவெளி போன்ற நடவடிக்கைகள் மூலம் பள்ளிச் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் கல்வி அமைச்சு தீவிரம் காட்டும் என்று திரு ஓங் கூறினார்.
“நம் பிள்ளைகளை வெகுநாட் களுக்கு வீட்டில் வைத்திருக்க முடியாது. சமூக உணர்வு ரீதியாகவும் மனநல ரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் கடுமையாக இருக்கும்.
“சமூகத்தில் ஏற்படும் கிருமித்தொற்று சம்பவங்களைக் கட்டுப் படுத்தி, குறைந்த எண்ணிக்கைக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், நாம் பள்ளிகளை மறுபடியும் திறக்க வேண்டும்; வழக்க நிலைக்குச் செல்லும் உணர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும். இவற்றைத் தகுந்த முன்னெச்சரிக்கை களுடன் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
நாள் முழுக்க முகக்கவசங்களை அணிந்திருப்பதில் சில பிள்ளைகள் பிரச்சினையை எதிர்நோக்கலாம். இதனால் பள்ளிக்குத் திரும்பும் அனைத்து பாலர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் முகக்கேடயங்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் முகக்கவசத்தையோ முகக்கேடயத்தையோ பள்ளி வளாகத்தில் அணிந்துகொள்ளலாம் என்றும் இது அனைவரின் பாதுகாப்புக்கும் ஏற்ற ஏற்பாடு என்றும் திரு ஓங் பதிவில் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அல்லது முகக் கேடயத்தை அணியப் பழகிக்கொள்வதில் இளம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவர் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
“ஒன்றிணைந்து செயல்படுவது, பொறுப்புணர்வுடன் இருப்பது, உயர்தர தனிநபர் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் வழி நம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளி திரும்பலாம்,” என்றார் திரு ஓங்.