வித்தியாசமான, கொண்டாட்ட உணர்வு குறையாத பெருநாள்

வித்தியாசமான, கொண்டாட்ட உணர்வு குறையாத பெருநாள்

3 mins read
b6e33ce6-c18a-4220-aed5-34e643d4571d
கடந்த ஆண்டு நோன்புப் பெரு நாளின்போது தமது பேரக் குழந்தையுடன் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: அதிபர் ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக் -

கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொண்டாட்ட உணர்வு குறைந்துவிட்டதாகப் பொருள்படாது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து உள்ளார்.

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாண்டு நோன்புப் பெருநாளில் பொதுமக்களுக்காக இஸ்தானா திறக்கப்படாது என்பதையும் குடும்ப ஒன்றுகூடல்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதையும் அவர், தமது நேற்றைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

தமது பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் வருகையற்ற இவ்வாண்டு நோன்புப் பெருநாள் எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பதையும் அவர் அந்தப் பதிவில் பகிர்ந்துகொண்டார்.

இந்நன்னாளை ஒன்றிணைந்து கொண்டாட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு முஸ்லிம்களை கேட்டுக்கொண்ட அதிபர், அவர்கள் அனைவருக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

"நோன்பு இருந்து தொழுகை நடத்தி முஸ்லிம்களுக்கு உரிய கடமைகளை நாம் நிறைவேற்றும் அதேநேரம் நமது குடும்பங்களையும் சமூகத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக்கூடிய சிங்கப்பூரருக்கு உரிய பொறுப்புகளையும் நிலைநிறுத்துகிறோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

"விலகி இருந்தாலும் தொடர்புகொள்ளவும் ஒன்றிணைந்து கொண்டாடவும் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தலாம்.

"உங்களில் சிலர் பாரம்பரிய உடை அணிந்து பெருநாள் உணவை ஒரு குடும்பமாகக் கொண்டாடி அனுபவிக்க காணொளி வழியாக விருந்தினர்களை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்திருப்பீர்கள்," என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்து உள்ளார்.

நோன்புப் பெருநாள் இஸ்தானா பொதுமக்கள் வருகை ரத்து செய்யப்பட்டு இருக்கும் வேளையில் அந்த நிகழ்வை இணையம் வழியாக 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஏற்பாட்டிலான வரைபடம் வழி மெய்நிகர் வருகை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளின் தளர்வு தொடங்கும்போது இரண்டாவது அலை உருவாவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்வார்கள் என்று அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், குடும்ப வருகை இல்லாத கொண்டாட்டம் என்பதால் இந்த நோன்புப் பெருநாள் மறக்கமுடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கைகோத்த சமூகம்; கைகொடுக்கும் தொழில்நுட்பம்

அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நேற்றிரவு தொலைக்காட்சியில் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிடுகையில், "வித்தியாசமான முறையில் கொண்டாடினாலும் பொருள்பொதிந்த நோன்புப் பெருநாள் இது. மெய்நிகர் தொழில்நுட்பம் வழியாக நாம் நமது குடும்பப் பிணைப்பை வலுவாக்குவதோடு நமது இல்லத்தில் இருந்தவாறு ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு கொண்டாடி மகிழ்வோம்," என்றார்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது வாழ்த்தில், "கொவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் மலாய்/முஸ்லிம் சமூகம் அரசாங்கத்துடன் கைகோத்திருப்பது பெருமைக்குரியது. நமது அன்புக்குரிய குடும்பத்தினரை சந்திக்க இயலாதபோதிலும் தொழில்நுட்பம் வழியாக நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்துவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, "ரமலான் என்பது மீள்திறனை வளர்ப்பது பற்றியதோடு அல்லாமல் கருணை, இரக்கம் ஆகிய உணர்வை பிரதிபலிப்பதும் ஆகும். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நாம் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் இவ்வாண்டின் நோன்புப் பெருநாள் அதிக பொருள் பதிந்த ஒன்றாக உள்ளது," என்றார்.

தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில், "இவ்வாண்டின் நோன்புப் பெருநாள் வித்தியாசமானது. கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் உள்ள மலாய்/முஸ்லிம் சமூகம் வழக்கமான கொண்டாட்டத்தில் ஈடுபட இயலாமற்போனாலும் மின்னிலக்கச் சாதனங்கள் மூலம் கொண்டாட்டத்திற்கான பல வழிகளைக் கண்டறிந்துள்ளது," என்றார்.