ஆண்டுக்கொரு முறை வரும் பண்டிகை என்றாலே அங்கு மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும்.
ஆனால், வசதி குறைந்தவர்களுக்கும் நோயுற்றிருக்கும் முதியவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியும் குதூகலமும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்தில் பிடோக் ரெசர்வோர் தொண்டூழியர் குழு ஒன்று நேற்று முன்தினம் பிடோக் ரெசர்வோர் வீவக பேட்டையில் வசிக்கும் 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியது.
அதில் பொருட்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாத 30 குடும்பங்களின் வீட்டுக்கே சென்று தொண்டூழியர்கள் பொருட்களை வழங்கினர். அந்த அன்பளிப்புப் பையில் அரிசி, மாவு, நூடல்ஸ், சீனி, உப்பு, மிளகாய், சார்டின், முட்டைகள், பிஸ்கட்டுகள், காப்பித்தூள், சமையல் பொருட்கள் என $120 முதல் $150 மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டன.
தொண்டூழியர்கள் 25 பேருடன் மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் கலந்துகொண்டதுடன் முஸ்லிம் குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைக் கூறினார் பிடோக் ரெசர்வோர்-பொங்கோல் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு விக்டர் லாய்.