சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நான்கு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசியும் அடங்குவர். அவர்களில் இருவர் பாலர் பள்ளி ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் அட் வெஸ்ட்கேட்’ பாலர் பள்ளியில் பணியாற்றும் 58 வயது மாதுவிடம் இம்மாதம் 8ஆம் தேதி கிருமித்தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொருவரும் பெண் ஊழியர்தான். 50 வயதான அப்பெண் அண்மைய நாட்களாக பாலர் பள்ளி வேலைக்குச் செல்லவில்லை.
இதற்கிடையே, சமூகத்தில் தினமும் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர் அல்லாத உள்ளூர்வாசிகள் கடந்த வாரம் சராசரியாக நாள் ஒன்றுக்கு எழுவர் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் அந்த சராசரி எண்ணிக்கை ஐந்தாக இருந்தது.
பாலர் பள்ளி ஊழியர்களிடமும் தாதிமை இல்லவாசிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளின் காரணமாக கடந்த வாரம் அந்த எண்ணிக்கை ஏற்றம் கண்டது.
பாலர் பள்ளி ஊழியர்கள் தவிர மேலும் பாதிக்கப்பட்ட மற்ற இரு சிங்கப்பூரர்களும் ஆடவர்கள். ஒருவரின் வயது 35 மற்றவருக்கு 37.
முன்னதாகக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடனும் சிடிபிஎல் துவாஸ் தங்கும் விடுதி கிருமிக் குழுமத்தோடும் தொடரிபில் இருந்தவர்கள் இவர்கள் என பின்னர் தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை 838 பேர் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
இவர்களையும் சேர்த்து இதுவரை 12,949 பேர் கிருமித்தொற்று அபாயத்திலிருந்து மீண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை வரையிலான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் இது 43 விழுக்காடு.
மேலும், அன்றைய நிலவரப்படி 323,000 வெளிநாட்டு ஊழியர்களில் 28,161 பேருக்கு அல்லது 8 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
புதிய இரு கிருமித்தொற்று குழுமங்களையும் அமைச்சு அறிவித்தது.
564 ஏ-இ பாலஸ்டியர் ரோடு, 71 காக்கி புக்கிட் தொழிற்பேட்டை ஆகியன அக்குழுமங்கள்.