கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம், வரும் ஜூன் 2ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வர உள்ள நிலையில், ஆயுர்வேத சிகிச்சை பெற அனுமதிக்கப்படும்.
மருத்துவப் பிரச்சினைகளை சமாளிக்கவும் நோயால் ஏற்படக்கூடிய வலியைச் சற்று தணிக்கவும் சிலர் நாடிச் செல்லும் பாரம்பரிய சிகிச்சைமுறைகள் அனுமதிக்கப்படவுள்ளன.
உடலியக்கம் மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
படிப்படியாக தொடங்கப்படவுள்ள சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்டது.
பொருளியல் சார்ந்த துறைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு ஏற்ப இச்சேவைகளும் கட்டம் கட்டமாக ஜூன் 2 முதல் தொடங்கும் என்று அமைச்சு கூறியது.
இருப்பினும் தங்கள் தோற்றத்தை மாற்றக்கூடிய சேவையைப் பெற விரும்புவோர், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நோய் அபாயத்தைக் குறைக்கக்கூடிய சிகிச்சையின் கீழ் அது வராது. இதன்படி சுருக்கங்களைச் சரிசெய்வதற்கான ‘போடோக்ஸ்’ சிகிச்சைகளோ தோலை இறுக்கும் ‘திரெட்-லிஃப்ட்’ சிகிச்சையோ அனுமதிக்கப்பட மாட்டா.
மருத்துவமனை அடிப்படை யிலான பராமரிப்பு, நிபுணத்துவ வெளிநோயாளிச் சேவைகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கூடுதல் தேவைகளுடைய நோயாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்புத் துணைச் சேவைகள் போன்றவை ஜூன் 2 முதல் தொடரும். இனியும் நாள் கடத்த முடியாமல் பல மாதங்களாகத் தள்ளி வைக்கப்பட்ட பராமரிப்புச் சேவைகள் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
மருத்துவத் தேவையையும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவோரின் எண்ணிக்கையையும் கருதி நாள்பட்ட நோய் தொடர்பான பராமரிப்பும் தொடரலாம். காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து, ராணுவ முன் சேர்க்கை நடவடிக்கையான மருத்துவப் பரிசோதனை ஆகியவையும் தொடங்கிடும்.
இதற்கிடையே சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருப்பதால், முடிந்தவரை மருத்துவப் பிரச்சினை களுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்றும் மருந்தை விநியோகச் சேவை வழி பெறலாம் என்றும் அது கூறியுள்ளது.