அனுபவமிக்க தொழிற்சங்கவாதியான திரு கே. கார்த்திகேயனுக்கு இவ்வாண்டுக்கான ஆக உயரிய மே தின விருது வழங்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டில் பொருளியல் நெருக்கடி காரணமாக ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்த எடுக்கப்பட்ட முடிவே, 60 வயதாகும் திரு கார்த்திக் தொழிற்சங்கத்தில் சேர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையை அவருக்குள் ஏற்படுத்தியது.
“பொருளியல் நெருக்கடி காரணத்தால் ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய போனசும் சம்பள உயர்வும் கொடுக்கப் போவதில்லை என்று கூறப்பட்டது. ஆனால், எண்ணெய், பெட்ரோலிய ரசாயனத் துறைகள் மட்டும் அந்தச் சமயத்திலும் லாபம் ஈட்டிக்கொண்டிருந்தன,” என்றார் திரு கார்த்திக்.
அப்போது அவர் 26 வயது இளையராக புலாவ் ஆயர் மெர்பாவ் தீவில் உள்ள சிங்கப்பூர் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்பராக வேலை பார்த்தார். புலாவ் ஆயர் மெர்பாவ் இப்போது ஜூரோங் தீவின் ஒரு பகுதியாக உள்ளது.
“எங்களுக்கு ஏன் சம்பள உயர்வும் போனசும் கொடுக்கப் போவதில்லை என்று எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கேட்டேன். அவர் தொழிற்சங்க உறுப்பினர்கள்தான் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க முடியும் என்றார். ஆகவே, நான் தொழிற்சங்கத்தைத் தொடங்கினேன்,” என்று விவரித்தார்.
1986 ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் பெட்ரோகெமிக்கல் வளாக ஊழியர் சங்கம் தோற்றம் கண்டது. அதன் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் காரணமாக ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் போனசும் கிடைத்தன.
1988 முதல் முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறிய கார்த்திக், என்டியுசியின் உதவித் தலைவர், நியமன நாடாளுமன்ற உறுப்பினர், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்தின் உறுப்பினர் என்று பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
எண்ணெய், பெட்ரோலிய ரசாயனத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் கிடைக்கவும் அத்துறையில் பாதுகாப்பான வேலையிட நிலவரத்தை நிலைநாட்டவும் பாடுபட்ட கார்த்திக்குக்கு இவ்வாண்டு மே தினத்தை ஒட்டி தொழிலாளர் தோழர் (நட்சத்திரம்) (பார்) எனும் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. 2001ல் சிங்கப்பூர் பெட்ரோகெமிக்கல் வளாக ஊழியர் சங்கம், பெட்ரோலிய தொழில்துறையின் ஒருங்கிணைந்த ஊழியர் சங்கத்துடன் இணைந்தது. அதன் நிர்வாகச் செயலாளராக திரு கார்த்திகேயன் இன்று வரை செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே ரசாயனத் துறை ஊழியர் தொழிற்சங்கத்தின் தலைவராக முப்பது ஆண்டுகளாக இருந்து வரும் ஜி. ராஜேந்திரனுக்கு தொழிலாளர் தோழர் (நட்சத்திரம்) விருது வழங்கப்பட்டுள்ளது.
‘ஜிஎஸ்கே’ மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நோய்த் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் இவர், 29ஆவது வயதில் தாம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகச் சேர்ந்து இரண்டு, மூன்று மாதங்களில் அதன் தலைவரானார். 1995ஆம் ஆண்டில் இவர் ரசாயனத் துறை ஊழியர் தொழிற்சங்கத்தின் செயற்குழுவில் சேர்ந்து பின் தலைவரானார்.
ஆபத்தான சூழலில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குக் கூடுதல் நாட்கூலிக்காகவும் போனசுக்காகவும் நிறுவன நிர்வாகத்தின ரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
தற்போது இவர் ஊழியர்களின் திறன்மேம்பாட்டுக்கான திட்டங்களை மும்முரமாகச் செயல்படுத்தி வருகிறார். ஆட்குறைப்பு, வேலையிட மரணம் தொடர்பில் திரு ராஜேந்திரன் ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவி நல்கி வருகிறார்.
கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்