ஆண்டுதோறும் நோன்புப் பெரு நாளன்று அதிபர் மாளிகை பொது மக்களுக்குத் திறந்திருக்கும். அன்று மக்கள் இஸ்தானாவின் பசுமை அழகை ரசித்தபடி, சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பார்கள். இஸ்தானா வளாகத்தைச் சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள்.
இவ்வாண்டு கொவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிபர் மாளிகை பொதுமக்களுக்கு திறக்கப்படாத போதிலும், அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை வழங்கினார் அதிபர் ஹலிமா யாக்கோப்.
சமூக சேவை நிறுவனங்களான நியூ லைஃப் ஸ்டோரீஸ், அயின் சொசைட்டி, ஜாமியா மறுவாழ்வு இல்லம், முஹம்மதியா நலவாழ்வு இல்லம், பெர்டாபிஸ் மறுவாழ்வு இல்லம் ஆகியவற்றின் மூலம் உதவி பெறும் 120 பயனாளிகளுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேற்றைய மெய்நிகர் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றனர்.
இஸ்தானாவின் பிரதான கட்டடத்தில் உள்ள வரவேற்பு மண்டபம், அரசாங்க அறை, விருந்து மண்டபம் ஆகியவற்றைக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் சுற்றிப் பார்த் தனர். அதிபர் மாளிகையின் வரலாற்றையும் அவர்கள் அறிந்து கொண்டனர். காவலர்கள் மாறும் சடங்கையும் காணொளி வழி பார்த்தனர். மேலும் மாளிகையின் முகப்பில் நடந்த ஒளிக் காட்சியையும் கண்டு ரசித்தனர்.
நோன்புப் பெருநாளையொட்டி சிறப்பாக உடுத்தியிருந்த பங்கேற்பாளர்கள், மெய்நிகர் சுற்றுலாவுக்குப் பின்னர் அதிபர் ஹலிமா யாக்கோப்புடன் உரையாடும் வாய்ப்பையும் பெற்றனர்.
அதிபரிடம் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தை எவ்வாறு சமாளிக்கிறார் என்று அவர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த திருவாட்டி ஹலிமா, நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தில் குடும்ப உறுப்பினர் களுடன் தொடர்ந்து நெருக்கமான உறவுகளை பேணுவதாகக் கூறினார். வாரத்தில் ஒருமுறைக்குப் பதிலாக இவ்வாண்டு நோன்பு மாதம் முழுவதும் குடும்பத்துடன் நோன்பு துறக்க முடிந்ததாக அவர் கூறினார்.
“கடந்த ஒரு மாதம் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனை வரும் இந்த நோன்பு மாதத்தில் வீட்டில் இருந்தார்கள். உறவுகள் அணுக்கமாகின. கொவிட்-19 முறியடிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை களைப் பின்பற்ற வேண்டிய நிலையில், நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகளை வலுவாக்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.
இந்த மெய்நிகர் சுற்றுலாவில் சமூக சேவை மூலம் பயன்பெறுவோரை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைவதாக அதிபர் ஹலிமா கூறினார்.