நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வரும் வகையில் ஜூன் 2ஆம் தேதி முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வு தொடங்கும். அப்போது புதிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளில் கட்டுமான நிறுவனங்கள் கண்ணும் கருத்துமாக உள்ளன.
இதுதொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய வீ சுவீ ஹுவாட் என்னும் கட்டுமான நிறுவனத்தின் செயலாக்க மேலாளர் வி மணிமாறன், ஊழியர்கள் பயணம் செய்யும் லாரிகளில் பாதுகாப்பு இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
லாரிகளில் அமரும் ஒவ்வொரு ஊழியருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் சாயக் குறியீடு வரையப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் அந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறி அருகருகே அமர்ந்தாலோ அதிகமான ஊழியர்கள் லாரியில் ஏறினாலோ எச்சரிக்கை ஒலி எழுப்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்
படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு பதிவாகும் கொவிட்-19 சம்பவங்களில் கட்டுமானத் துறை ஊழியர்கள் கணிசமான அளவில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மத்தியில் மீண்டும் கிருமிப் பரவல் தொடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதிய நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வேலையை மீண்டும் தொடங்குவதற்கு முன் அதற்குரிய ஒப்புதலை கட்டட, கட்டுமான ஆணையத்திடம் இருந்து நிறுவனங்கள் பெறவேண்டும்.
எம்ஆர்டி ரயில் நிலையக் கட்டுமானம், பாதாளக் கழிவுநீர் திட்டப் பணிகள் போன்ற காலவரை
யறைக்கு உட்பட்டவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.