சிங்கப்பூர் பொருளியல் வீழ்ச்சி முன்னர் எதிர்பார்த்ததைவிட இவ்வாண்டு மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்று உலக அளவில் பரவியதும் உள்ளூரில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டங்கள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒருபக்கம் அரசாங்கம் இதை ஆதரவுத் திட்டங்கள் மூலம் சரிசெய்யும் என்றாலும் மறுபக்கம் ஒட்டுமொத்த பொருளியல் நிலவரம், குறிப்பாக வேலைச் சந்தை, இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலும், அதற்கு மேலும் மோசமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால் வேலையிழப்பு அதிகரிக்கும் சாத்தியத்தை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாக மனிதவள அமைச்சு நேற்று தனது செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தது.
உலகில் கொரோனா நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதைப் பொறுத்தும் அத்துடன் சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் பொருளியல் மந்தநிலைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதைப் பொறுத்தும் உள்ளன. இது இவ்வாண்டின் இரண்டாம் பாதியில்தான் தெரியவரும் என்று நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.
இந்நிலையில், சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டு 4 முதல் 7 விழுக்காடு வரை சுருங்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுைரத்துள்ளது.
அப்படி நேருமானால், அது சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின் ஏற்படும் ஆக மோசமான பொருளியல் மந்தநிலை என்று அது சுட்டியுள்ளளது.
உலகப் பொருளியல் நிலவரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்கா போன்ற உலக பொருளியல் வல்லரசுகளிலும் மற்ற நாடுகளிலும் கொரோனா கிருமித்தொற்று மறுபடியும் பரவத் தொடங்கும் அபாயம் உள்ளதால் அது உலக அளவில் பொருளியல் நடவடிக்கைகளை மேலும் பாதிக்கும் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது.
மேலும், உலகின் பல முக்கிய பொருளாதாரங்களில் நிதிக்கொள்கைகளைக் கொண்டு நிலைமையைச் சரிசெய்யலாம் எனும் நம்பிக்கை குறைந்து வருகிறது.
இது ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும். அபாய நிலைகளை சரிசெய்யக்கூடிய ஒருவரின் திறனைக் குறைக்கக்கூடும்.
அத்துடன் நிதிச் சந்தைகளில் அளவுக்கதிகமான ஏற்ற இறக்கத்தையும் ஏற்படுத்தும்.
இந்த பின்னணியில், சிங்கப்பூர் பொருளியலுக்கான கணிப்பு மார்ச் மாதத்திலிருந்து மேலும் பலவீனமடைந்துள்ளது என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.