தற்போதைய சிரமமான காலகட்டத்தில் புதிய சிங்கப்பூரை உருவாக்குவோம் என்று பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.
நம்முடைய நாட்டை நிறுவிய தலைமுறையினரின் தைரியமான புதிய வழிகளை பின்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் பதிவில் கூறிய பிரதமர், ஒற்றுமையாக, ஒன்றாக முன்னேறுவோம் என்றார்.
“சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இங்கு இருந்த பிரிட்டிஷ் படைகள் நம்முடைய பொருளியலுக்கும் தற்காப்புக்கும் ஆதரவாக இருந்தன.
“ஆனால் பிரிட்டிஷ் படைகள் திடீரென மீட்டுக்கொள்ளப்பட்டதால் சிங்கப்பூர் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்நோக்கியது. ஆனால் தேச நிறுவனர்கள் மக்களையும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு இருந்தனர். நமது முன்னோடித் தலைமுறையினர் நெருக்கடியைச் சமாளித்த அதே நம்பிக்கையை நாம் தற்போது கொண்டிருக்க வேண்டும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு நமது பொருளியல் 4 முதல் 7 விழுக்காடு வரை சுருங்கும் என வர்த்தக, தொழில் அமைச்சு கணித்துள்ளதாகக் கூறிய பிரதமர், இது, சுதந்திரத்துக்குப் பிறகு நாம் சந்தித்திருக்கும் மோசமான பொருளியல் பின்னடைவு என்று குறிப்பிட்டார்.
“மக்களுக்கு ஆதரவான திட்டங்களுக்கு தேசிய கையிருப்பு நிதி கைகொடுத்துள்ளது. இதற்காக முன்னோடித் தலைமுறையினரின் தியாகங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
அடுத்தடுத்த வெற்றிகரமான அரசாங்கங்களின் விவேகமான நிதித் திட்டமும் ஒழுக்கமும் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க வலுவான நிலையில் வைத்துள்ளது. தொற்று நோய் பரவலுக்குப் பிறகு வலுவாக மீளவும் வழி வகுத்துள்ளது,” என்றார் அவர்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட நான்காவது வரவு செலவுத் திட்டத்தை சுட்டிய திரு லீ, முன்னைய ஒன்றிணைக்கும், மீட்சிக்கான, ஒற்றுமைக்கான வரவு செலவுத் திட்டங்களுடன் சேர்த்து கொவிட்-19 கிருமிப் பரவல் பாதிப்புகளிலிருந்து மீண்டு வர ஏறக்குறைய நூறு பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“வேலைகளை பாதுகாப்பதற்கும் புதிய வேலைகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். புதிய மாற்றத்திற்கு ஏற்ப மாறவும் அந்த மாற்றத்தை புகுத்திக் கொள்ளவும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். முன்னிலை அமைப்புகளுக்கும் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். எளிதில் பாதிக்கக்கூடியவர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் தொடர்ந்து உதவிகளைச் செய்வோம். அந்த வகையில் யாரும் பின்தங்கியிருக்கவிடமாட்டோம்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
“கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான நட வடிக்கைகள் முடிவடையவிருக் கின்றன. ஒரு வாரக்காலத்திற்குள் வர்த்தகங் களைத் திறக்கவுள்ளோம். இந்த நிலையில் மற்றவர்களுக்கு உதவ முன் வந்தவர்களின் கதைகள் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது. முன்நிலை ஊழியர்களின் தியாகங்கள் நம்மை பாதுகாப்பாக வைத்துள்ளது,” என்று பிரதமர் லீ கூறினார்.