சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் ஜூன் 2 முதல் படிப்படியாகத் திறக்கப்படும். தொழுகை நடத்துவோருக்கு முதலில் வரம்புக்கு உட்பட்ட இடங்கள் இருக்கும்.
என்றாலும் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைகளுக்கும் அதிகமானோர் பங்கெடுக்கும் சமய நிகழ்ச்சிகளுக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனுமதி இருக்காது என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் யாருக்காவது கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு அது வெளியே தெரியாமலேயே இருக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் கூடிய இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, கிருமிப் பரவலைத் தடுக்க இடம்பெறும் தேசிய முயற்சிக்கு உறுதுணையாகவும் இது இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில், கிருமித்தொற்று காரணமாக மார்ச் 13ல் பள்ளி வாசல்கள் மூடப்பட்டன. இஸ்லாமிய சமய போதனை போன்ற சேவைகள் இணையம் வழிக்கு மாற்றப்பட்டன.
கூட்டுத் தொழுகை, சமய நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வீட்டிலேயே தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கட்டம் கட்டமாக அகற்ற சிங்கப்பூர் இப்போது முடிவு செய்துள்ளது.
இதில் முதல்கட்டம் நடப்புக்கு வர உள்ளது.
இந்தச் சூழலில், மறுபடியும் சமூகத்தில் கிருமித்தொற்று கிளம்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் முயற்சியாக கூடுமானவரை ஆக அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக முயிஸ் தெரிவித்துள்ளது.
ஜூன் 2 முதல் 7 வரை பள்ளிவாசல்கள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். ஜூன் 8 முதல் பெரும்பாலான பள்ளிவாசல்கள், தனிப்பட்ட முறையிலான அன்றாட ஐந்து தொழுகை களுக்கு அனுமதிக்கும்.
பள்ளிவாசல்களில் பொது இடங்கள் எல்லாம் முறைப்படி கிருமிநாசினி மருந்தடித்து சுத்தம் செய்யப்படும்.
ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படும்.
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான மின்னிலக்க பரிசோதனை முறையும் நடப்பில் இருக்கும். சமூக இடைவெளி நியதியும் கடைப்பிடிக்கப்படும்.
தனிப்பட்ட தொழுகைக்காக வரம்புக்குட்பட்ட இடங்கள் ஒதுக்கப்படும். ஐந்து வரைப்பட்ட தொழுகை பகுதிகள் உருவாக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இடம் இருக்கும்.
அத்தியாவசிய சேவைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை இடத்தில் தொழுகை மேற்கொள்ள இடம் இல்லாதவர்களுக்கும் இதில் முன்னுரிமை கிடைக்கும்.
முதியவர்கள், சிறார்கள் போன்ற எளிதில் பாதிக்கக்கூடிய மக்கள் பள்ளிவாசல்களுக்கு இப்போதைக்கு செல்ல வேண்டாம் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது.