தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் ஊழியர்களை ஏற்றிச் செல்லும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கூடுதல் விதிமுறைகளையும் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாகனத்தில் இருக்கும்போது ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அந்த வாகனங்களில் பயணி ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் 0.496 சதுர மீட்டருக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அதாவது, ஒரு லாரி அல்லது வேனில் அதிகபட்சமாக ஏற்றிச்செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை 25% குறையும். எடுத்துக்காட்டாக, ‘அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை’ வில்லையில் 36 பேர் எனக் குறிப்பிட்டிருந்தால், அந்த எண்ணிக்கை 27ஆகக் குறைக்கப்பட வேண்டும்.
தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் வேலையிடங்களுக்குச் சென்று வர, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தனியார் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அப்போது, மற்ற பயணிகள் எவரும் அந்த வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது.
மருத்துவ ஆலோசனை, தொழில்நுட்ப மேம்பாடுகள், செயல்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வேலையிடங்களுக்கான விதிமுறைகளை அவ்வப்போது மாற்றியமைப்பது தொடர்பில் தொடர்ந்து முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என அமைச்சு கூறியிருக்கிறது.