ஜூன் 2 முதல் கோவில்கள் திறக்கப்பட்டாலும் மிகக் குறைந்த அளவினரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வீட்டிலிருந்தவாறு வழிபட பக்தர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் கூறியுள்ளது. முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வின்போது பக்தர்களுக்கான சேவையை கோவில்கள் படிப்படியாகவே தொடங்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஒரு நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்தது. அந்த வழிமுறைகளைக் கோவில்கள் பின்பற்றும் என்று தெரிவித்த வாரியம், ஒரு நேரத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்குள் இருக்கலாம் என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் நினைவூட்டி உள்ளது.
“கோவிலுக்குள் இருக்கும்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற குடும்பத்தினரோடு எவ்வித நெருக்கமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அத்துடன், கோவிலுக்குள் இருக்கும் நேரத்தை பக்தர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். பக்தர்கள், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளி எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
“தீர்த்தம், விபூதி, குங்குமம், துளசி போன்றவை பக்தர்களின் கைகளில் வழங்கப்படாது. தலையில் சடாரி வைக்கப்படாது. காளாஞ்சி அல்லது பிரசாதம் வழங்குவது பற்றி அந்தக் கோவில்கள் முடிவு செய்யும். கோவிலுக்குள் நுழையும்போது கைபேசி வழியாக ‘சேஃப்என்ட்ரி’ மின்னிலக்க வருகைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். உடல்வெப்ப நிலை சோதிக்கப்படும். 37.5 டிகிரிக்கு மேல் உடல்வெப்பம் இருப்போருக்கு அனுமதி மறுக்கப்படும். எல்லா நேரத்திலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.
“கோவிலுக்குப் பொருந்தக்கூடிய வகையில் நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. வழிபாட்டுக்காக முன்பதிவு செய்தவர்களை மட்டும் சில கோவில்கள் அனுமதிக்கும் வேளையில் நேரடியாக வருபவர்களை வேறு சில கோவில்கள் அனுமதிக்கக்கூடும். கோவில் கதவுகள் திறந்து வைக்கப்படுவதால் முன்பதிவு செய்யாதவர்கள் வெளியிலிருந்தவாறு தரிசனம் செய்யலாம்,” என வாரியம் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.