நாளை மறுநாளிலிருந்து குறிப்பிட்ட சில சேவைகளை மட்டும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தொடரவிருக்கிறது. அதிலும் முன்பதிவு செய்தோருக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்படும். முன்பதிவு செய்யாமல் வருவோருக்கு அனுமதி மறுக்கப்படும்.
இணையத்தளம் வழியாக வழங்கப்பட முடியாத சேவைகளுக்கு மட்டும் அதிகாரிகளிடமிருந்து நேரடியான சேவை கிடைக்கும் என்று ஆணையம் நேற்று தெரிவித்தது. கடப்பிதழ், அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதும் நீண்டகால குடிநுழைவுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதும் இதில் அடங்கும்.
ஏற்கெனவே விண்ணப்பத்தை சமர்ப்பித்திருப்பவர்கள் மட்டுமே ஆணையத்தின் கட்டடத்துக்குச் சென்று சேவைகளைப் பெற முன்பதிவு செய்யலாம். ஆணையத்தின் இணையத்தளத்துக்கு (https://eservices.ica.gov.sg/ibook) சென்று அல்லது ஆணையத்தின் கைபேசி செயலி மூலம் (eAPPT@ICA) முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இணையத்தளம் அல்லது செயலி மூலம் பெற முடியாத சேவைகளுக்கு மின்படிவம் மூலம் ஆணையத்தின் அனுமதிக் கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக முன்பதிவு செய்கொள்ளலாம் (https://go.gov.sg/ica-services).
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் இருந்தபோது சேவைகளைப் பெற ஆணையத்தின் கட்டடத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியை ஆணையம் அல்லது செயலி மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் முடிவடைந்தவுடன் அவசரப்பட்டு வருவதைத் தவிர்க்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, சௌகரியம் கருதி அது இவ்வாறு கூறியது.
இன்னும் பெற்றுக்கொள்ளப்படாத கடப்பிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான தேதி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக சிங்கப்பூர் குடியுரிமை, நிரந்தரவாச அந்தஸ்து, நீண்டகால வருகையாளர் அனுமதி சீட்டு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனவர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதங்களின் காலாவதி தேதி ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 31ஆம் தேதி வரை ஆணையத்திடமிருந்து கடிதம் பெற்ற பிறகு அடையாள அட்டைக்கு மீண்டும் பதிவு செய்திருப்பவர்களுக்கும் புதிய கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்திருப்போருக்கும் ஒருமுறை விநியோகச் சேவை மூலம் அடையாள அட்டைகளையும் கடப்பிதழ்களையும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரையும் ஆணையம் அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து ஜுலை மாதம் நடுப்பகுதி வரை ஏதேனும் ஒரு நாளில் தொடர்புகொண்டு இச்சேவை குறித்த மேல் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்.
அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் அவசரமாக தேவைப்பட்டால் ஆணையத்தின் இணையத்தளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.