முதலாளிகள் தங்களது வெளிநாட்டு ஊழியர்களை வேறு தங்கும் விடுதிகளுக்கு மாறிச் செல்லவோ வேறு நிறுவனத்திற்கு வேலை செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் வெளிநாட்டு ஊழியர் தீர்வைக்கான தள்ளுபடியை அவர்கள் பெறமுடியும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளது.
சென்ற மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டு ஊழியர் தீர்வைக்கான தள்ளுபடிகளும் விலக்குகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி இந்த ஜூன் மாதத்தில் 100 விழுக்காடு, அடுத்த மாதம் 50 விழுக்காடு தீர்வை விலக்கு அளிக்கப்படும். அதேபோல இம்மாதம் 750 வெள்ளியும் அடுத்த மாதம் 350 வெள்ளியுமாக தீர்வை தள்ளுபடி வழங்கப்படும்.
GoBusiness இணையப்பக்கத்தில் வர்த்தக, தொழில் அமைச்சால் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத வர்த்தகங்களுக்கும் இச்சலுகைகள் பொருந்தும்.
அதேநேரம் கட்டுமானம், கடல் துறை, உற்பத்தித் துறை ஆகியவற்றைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர் தீர்வைச் சலுகைகள் கிடைக்கும்.
இருப்பினும் இச்சலுகைகளைப் பெற முதலாளிகள் இரண்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டி இருக்கும் என அமைச்சு நேற்று தெரிவித்தது.
“முதலாவதாக, வொர்க் பெர்மிட் மற்றும் எஸ்-பாஸ் ஊழியர்கள் கொவிட்-19 நோய் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களை தங்கியிருக்கும் விடுதியிலிருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட தங்கும் விடுதிக்கு மாற்ற அமைச்சுக்கு முதலாளிகள் வழிவிட வேண்டும். அவர்கள் வேலைக்குத் திரும்ப இந்த நடைமுறை உதவும்.
“மேலும் இந்த ஏற்பாட்டுக்காக தற்போதைய தங்கும் விடுதி உரிமையாளரிடமிருந்து விலகி வேறு புதிய தங்கும் விடுதியுடன் மறுஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படலாம்,” என அமைச்சு கூறியுள்ளது.
ஊழியர் தேவைப்படும் மற்றொரு நிறுவனத்துக்கு தமது ஊழியரை மாற்ற அமைச்சை அனுமதிக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
அவ்வாறு மாற்றும்போது ஊழியரை ஏற்கும் அந்த இரண்டாவது நிறுவனத்தின் சொந்த ஊழியர்கள், நோய்த் தொற்று இல்லை என்ற அறிவிப்புக்காக தங்கும் விடுதியிலேயே இருக்க வேண்டும் என்றும் அமைச்சு தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த இரு நிபந்தனைகளுக்கும் எல்லா முதலாளிகளும் இணையம் வழி ஒப்புதல் வழங்குவது அவசியம் என்றும் அதனை வரும் 10ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தி உள்ளது.
“நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்திலிருந்து வெளியேறி நமது பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு இதுபோன்ற ஆதரவு கைகொடுக்கும். தங்கள் வர்த்தகங்களை பின்னொரு தேதியில் மீண்டும் தொடங்க இருப்போர் தங்களது வெளிநாட்டு மனிதவளத் தேவையை மறுபரிசீலனை செய்து ஊழியரணியை சரிசெய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.