மின்னிலக்கத் தேர்ச்சிகளை ஸ்டால் கடைக்காரர்களும் மூத்த குடிமக்களும் கற்றுக்கொள்ள உதவுவதற்காக இந்த மாதம் 1,000 மின்னிலக்கத் தூதுவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
அவர்களுக்கு $1,800 முதல் $2,100 வரை ஊதியம் கிடைக்கும் என்று விளம்பரங்கள் மூலம் தெரிய வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
இந்த ஊழியர்கள் ஓராண்டு தற்காலிக உடன்பாட்டின்கீழ் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள் என்று அரசாங்கத்தின் இணையத்தளம் (Careers @ Gov) தெரிவிக்கிறது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட எஸ்ஜி மின்னிலக்க அலுவலகம் என்ற அமைப்பின்கீழ் இந்தத் தூதுவர்கள் பணியாற்றுவார்கள்.
இவர்கள் 112 அங்காடி நிலையங்களுக்கும் ஈரச்சந்தைகளுக்கும் சென்று அங்குள்ள ஸ்டால் கடைக்காரர்களிடம் மின்னிலக்கமயத்தின் முக்கியத்துவத்தை எல்லாம் எடுத்துக்கூறி மின்னிலக்கமய பட்டுவாடாவுக்கு மாறும்படி கடைக்காரர்களை ஊக்கமூட்டுவார்கள்.
அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இவர்கள் 100,000 முதியவர்களை எட்டி அவர்களுக்கு அடிப்படை மின்னிலக்கத் தேர்ச்சிகளைப் போதித்து இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தூதுவர்களில் தொண்டூழியர்களும் ஊழியர்களும் கலந்து இருப்பார்கள் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தொடர்பு தகவல் அமைச்சும் தெரிவித்துள்ளன.
இந்தப் பணிக்கு பலதரப்பட்ட மக்களும் தேவைப்படுவார்கள் என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.