கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டோ அதற்கு மேலோ கூட ஆகக் கூடும் என்பதாலும் சமூகத்தில் புதிய தொற்று குறைந்திருப்பதாலும் பள்ளிக்கூடங்களைத் திறக்க இதுவே சரியான தருணம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.
நீண்ட காலத்துக்கு பள்ளிகளை மூடுவது என்பது கல்விப் பருவத்தில் மட்டுமல்லாது உணர்வு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிள்ளைகளிடம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கல்வி என்பது தேர்வுக்கானதும் நல்ல மதிப்பெண்களை பெறு வதற்கானதும் மட்டுமல்ல நடத்தை மற்றும் சமூக உணர்வு மேம்பாடு தொடர்பானதும்கூட. ஒரு முழு தலைமுறையின் அத்தகைய அனு பவங்களை நாம் பறித்துவிடலாகாது,” என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த பின்னர் நேற்று சில பிள்ளைகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. அவற்றில் ஒன்றான ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்திருக்கும் சிங்னான் தொடக்கப் பள்ளிக்கு காலையில் அமைச்சர் ஓங் வருகையளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாதுகாப்பு நடைமுறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடப்பில் இருப்பதால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
வகுப்பறை கற்றல் முறை, மின்னிலக்க இணையம்வழி கற்றல் முறை ஆகிய இரண்டின் சிறந்த பலன்களைப் பெறும் வகையில் அவற்றை எவ்வாறு இணைப்பது என்பது பற்றி கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.
ஒரு மாத காலம் முழுக்க முழுக்க வீட்டிலிருந்து கல்வி கற்ற நடைமுறை நிறைய அம்சங்களைக் கற்றுத் தந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“வீட்டிலிருந்து பாடம் படிப்பது, மின்னிலக்க இணையம்வழி கற்றல் போன்றவை வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக அமைய முடியாது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். இருந்தபோதிலும் ஒரு மாதம் முழுவதும் வீட்டிலிருந்தவாறே கல்வி கற்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அந்தப் புதிய முறையிலும் சிறந்து விளங்கக் கற்றிருக்கிறோம்.
“வகுப்பறைக் கல்விமுறையில் இல்லாத சிறப்பம்சங்கள் இணையம்வழி கற்றலில் இருப்பதை நாம் இப்போது அறிந்திருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார். வகுப்பறைக்கு வெளியே சுயமாகக் கற்றலில் மாணவர்கள் ஈடுபடுவது என்பது மின்னிலக்கக் கற்றலின் பலத்தை உணர்த்துகிறது என்றார் அவர்.
“இவற்றை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வி அமைச்சில் மிகப்பெரியதொரு மறுஆய்வு நடைபெற்று வருகிறது. வகுப்
பறைக் கல்வி, மின்னிலக்கக் கல்வி ஆகிய இரண்டையும் கலப்பது தொடர்பாக சிறந்த திட்டத்தை வகுப்பதைப் பற்றிய ஆய்வு அது. இவ்விரண்டிலும் உள்ள சிறப்பு
களைப் பெற அவற்றை ஒன்றுசேர்ப்பது நவீன கல்வி முறைக்குப் பொருத்தமாக இருக்கும். எனவே இதனை மிக விரைவில் நாம் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். முழுக்க முழுக்க வீட்டிலிருந்து கற்பது என்னும் ஏற்பாட்டை பள்ளிகள் திடீரென செய்ய வேண்டி இருந்தது என்பதால் அவற்றில் மேம்பாடு காணவேண்டிய அம்சங்கள் இன்னும் நிறைய உள்ளன,” என்று திரு ஓங் தெரிவித்தார்.
இதற்கிடையே சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று பாலர் பள்ளி ஒன்றுக்கு வருகையளித்தார். பாதுகாப்பு நடைமுறைகளை அமல் படுத்த மேற்கொண்ட முயற்சி களுக்காக எல்லா பாலர் பள்ளிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ‘கொவிட்-பாதுகாப்பு ஏபிசி’ பற்றி எடுத்துச் சொல்லி பிள்ளைகளிடம் கற்பிப்ப தில் பெற்றோரும் தங்கள் பங்கை ஆற்றலாம் என்று அவர் கூறினார்.