கொவிட்-19 விதிமுறைகளை மீறியதாக ஒரு பெண் உள்ளிட்ட எழுவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது ராபர்ட்சன் கீ வட்டாரத்தில் ஒன்றுகூடியதாகத் தெரிவிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
திட்டம் நடப்பில் இருந்தபோது சமூக ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனை மீறியதால் எழுவரும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. நீல் கார்டன் புக்கன், 30, ஜேம்ஸ் டைட்டஸ் பீட், 33, ஜோசப் வில்லியம் போய்ன்டர், 25, பெர்ரி ஸ்காட் பிளைர், 37, மைக்கல் ஸெர்னி, 45, ஜெஃப்ரி ஜார்ஜ் பிரவுன், 52. இவர்களோடு பாவ் நியுயென் பிரவுன், 40, என்னும் மாதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவார்.
மேலும் ஜெஃப்ரி ஜார்ஜ் பிரவுனின் மனைவி இவர் என்று அறியப்படுகிறது.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சிங் கப்பூரில் வாழ்ந்த இம்மாதுவின் மகன் இங்குள்ள பள்ளியில் படிப்பதாக இவரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த ஏழு பேரில் நால்வர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். இருவர் அமெரிக்காவையும் ஒருவர் ஆஸ்திரியாவையும் சேர்ந்தவர்கள்.
கடந்த மாதம் 16ஆம் தேதி மாலை 6.19 மணிக்கும் 6.44 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ராபர்ட்சன் கீ வட்டாரத்தில் உள்ள மெர்பாவ் ரோட்டில் இத்தாலிய உணவகம் அருகே இந்த எழுவரில் நால்வர் சமூக நோக்கத்திற்காக ஒன்று கூடியதாகக் குற்றச்சாட்டில் தெரி விக்கப்பட்டது.
மற்ற மூவர் டேப் அட் ராபர்ட்சன் கீ என்னும் மதுபானக் கூடம் அருகே அன்று மாலை 6.08 மணிக்கும் 6.40 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆஸ்திரிய நாட்டவரான மைக்கல் ஜெர்னி சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் அவரது இரு பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராபர்ட்சன் கீ வட்டாரத்தில் சிலர் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி யைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக இருந்ததைக் காட்டும் படங்கள் கடந்த மாதம் சமுக ஊடகங்களில் பரவின. அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும் சிலர் தங்களது முகக்கவசத்தை வாய்க்குக் கீழே இறக்கிவிட்டவாறும் படங்களில் காணப்பட்டனர்.