நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவிற்கு வருமுன்னே, கடந்த ஞாயிறன்று லக்கி பிளாசா கடைத்தொகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்கள் திரண்டனர்.
அந்தக் கடைத்தொகுதிக்கு வெளியே ஏராளமானோர் நீண்ட வரிசைகளில் நிற்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதால், பாதுகாப்பு இடைவெளி விதி மீறப்படுவதாக இணையவாசிகள் பலரும் கவலை தெரிவித்தனர்.
நெரிசல் கட்டுப்பாடு, உடல் வெப்பநிலைப் பரிசோதனை, ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல் போன்ற பணிகளுக்காக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கடந்த ஞாயிறன்று லக்கி பிளாசாவில் அமலாக்க அதிகாரிகளையும் கூடுதல் பாதுகாப்பு இடைவெளித் தூதர்களையும் பணியில் அமர்த்தியது என்று கழகத்தின் சில்லறை, உணவருந்துதல் பிரிவு இயக்குநர் திருவாட்டி ரனிதா சுந்தரமூர்த்தி கூறினார்.
விதிமீறுவோர் மீது அபராதம் அல்லது வழக்குப்பதிவு போன்ற அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக, இல்லப் பணிப்பெண்கள் ஓய்வு நாட்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மிகவும் அவசியமெனில் அல்லது உணவு வாங்க வேண்டுமெனில், தங்களது முதலாளிகளிடம் ஒப்புதல் பெற்றே அவர்கள் வெளியே செல்ல வேண்டும். வேலை முடிந்ததும் அவர்கள் உடனடியாக வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டும்.
மாத இறுதி நாள் என்பதால் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் பணம் அனுப்புவதற்காக அவர்கள் அங்கு திரண்டிருக்கலாம் என்றும் இங்கு 13 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலை செய்து வரும் பிலிப்பீன்சைச் சேர்ந்த திருவாட்டி எம் ஜே வால்டெஸ் கூறினார்.