ஒரே நேரத்தில் குறைந்தது எட்டு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில், 1.5 மில்லியன் கள்ள சிகரெட் பாக்கெட்டுகளை இறக்குமதி செய்ததன் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு $1.1 மில்லியனுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலியான வர்த்தகச் சின்னத்தைக் கொண்டு கட்டப்பட்டிருந்த அந்த சிகரெட்டுகள் நியூட்டன் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் சுங்கத்துறை வளாகத்தில் மூன்று கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தன.
அந்தக் கள்ள சிகரெட்டுகளின் வர்த்தகச் சின்னத்திற்குச் சொந்தக்காரர் இதுகுறித்து சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சிகரெட்டுகளின் வர்த்தகச் சின்னத்திற்குச் சொந்தக்காரர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த மூன்று ஆடவர்கள் 41க்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் தற்போது போலிஸ் விசாரணைக்கு உட்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய இடங்களில் பொங்கோல் டிரைவ், ஹில்வியூ அவென்யூ, ஜாலான் அசாஸ், தெக் வாய் லேன், கிளமெண்டி அவென்யூ 2, அங் மோ கியோ அவென்யூ 5, பிடோக் சவுத் அவென்யூ 3, பீச் ரோடு ஆகியவை அடங்கும்.