அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (என்டியுசி) கொடுத்திருப்பது பற்றி நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், இது அத்திட்டத்தின் நம்பகத்தன்மைக்கு பாதகமாக அமையக்கூடும் என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் அலுவலக அமைச்சரும் என்டியுசியின் தலைமைச் செயலாளருமான இங் சீ மெங், “ஊழியர்களின் நலனில் தமது அமைப்புக்கு மிகுந்த அக்கறையும் ஆற்றலும் இருக்கின்றன என்று அரசாங்கம் கருதியதால் அது சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தை (சர்ஸ்) நிர்வகிக்கும் பொறுப்பை என்டியுசியிடம் ஒப்படைத்தது.
“டாக்சி ஓட்டுநர்கள் உட்பட சுயதொழில் புரிவோரின் நலன் தொழிலாளர் இயக்கத்தின் அக்கறையாக இருந்து வந்துள்ளது. அவர்கள் சந்திந்து வரும் பிரச்சினைகளை என்டியுசி அரசாங்கத்திடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளது,” என்று விவரித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று தலையெடுத்தபோது, டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் 50% குறைந்தது. அப்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் என்டியுசி அவர்களுக்கு உதவி வந்துள்ளது. ஆகவே, டாக்சி ஓட்டுநர்களுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் விரைவில் உதவி செய்ய என்டியுசியால் முடியுமா என்று அரசாங்கம் கருதியிருக்கலாம்,” என்றும் திரு இங் விளக்கினார்.
முத்தரப்புப் பங்காளித்துவ அணுகுமுறை சிங்கப்பூருக்குப் பல வெற்றிகளை அளித்திருப்பதால், அதில் ஒரு பங்காளியாக இருக்கும் என்டியுசி இந்தத் திட்டத்தை நிர்வகிக்க அழைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், மனிதவள அமைச்சின் மேற்பார்வையில் என்டியுசி இத்திட்டத்துக்குக் கிடைக்கப்பெறும் விண்ணங்களையும் இதன் தொடர்பான மேல்முறையீடு களையும் கவனிக்கிறது என்றார்.
தமது குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களில் என்டியுசிதான் எல்லா தொடர்புகளையும் கோரிக்கைகளையும் கவனித்துள்ளது என்றும் மனிதவள அமைச்சின் ஈடுபாடு அதில் தெரிவதில்லை என்று திருவாட்டி லிம் கூறிய கருத்துக்கு, “அமைச்சு வகுத்த கட்டமைப்பின்கீழ் வரும் விதிமுறைகளுக்கேற்பதான் என்டியுசி விண்ணப்பங்களையும் கோரிக்கைகளையும் கவனித்து வருகிறது என்றும் திரு இங் தெளிவுபடுத்தினார்.