குறைந்த வருமானம் ஈட்டும் சில சிங்கப்பூரர்களுக்கு இம்மாதம் $1,000 வெள்ளி வழங்கப்படும். இந்த வழங்கீட்டுக்குத் தகுதி பெற 49 வயதுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். குறைந்தது 20 வயது அல்லது அதற்கும் குறைவான ஒரு பிள்ளையாவது இருக்க வேண்டும். அந்தப் பிள்ளை சிங்கப்பூரராக இருக்க வேண்டும். குறைந்த வருமானம் ஈட்டுவோர் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு இது வழங்கப்படுகிறது. இத்துடன் சேர்த்து, பரிவு மற்றும்
ஆதரவு தொகுப்புத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு சிங்கப்பூரர்களுக்கு கொடுக்கப்படும் மொத்த வழங்கீட்டுத் தொகை $3.5 பில்லியனை எட்டியுள்ளது.
ஒற்றுமைக்கான வழங்கீட்டின் இரண்டாவது பகுதியாக வருமானத்தைப் பொறுத்து சிங்கப்பூரர்
களின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து $600 அல்லது $300 வழங்கப்படும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. சிங்கப்பூர் குடியுரிமைஉள்ள 20 வயதும் அதற்கும் குறைவான குறைந்தது ஒரு பிள்ளையைக் கொண்டுள்ள பெற்றோருக்குக் கூடுதலாக $300 கிடைக்கும். 50 வயதும் அதற்கும் அதிகமான சிங்கப்பூரர்களுக்குக் கூடுதலாக $100 ரொக்கம் வழங்கப்படும்.
ஒற்றுமைக்கான வழங்கீட்டுத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்களுக்கு அவர்களது வருமானத்தைப் பொறுத்து இவ்வாண்டில் மொத்தம் $900, $600 அல்லது $300 வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒற்றுமைக்கான வழங்கீட்டுத் திட்டத்தின்கீழ் $600 வழங்கப்பட்டது. அப்போது $300 மட்டும் பெற தகுதி பெற்றவர்களுக்கு அத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டின் வருமானத்தில் $100,000க்கும் அதிகமான வருமான மதிப்பீட்டைக் கொண்டவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்களுக்கும் $300 மட்டுமே கிடைக்கும். எனவே, இவர்களுக்கு இம்மாதம் வழங்கீடு கிடைக்காது. இம்மாதம் மொத்தம் $1.6 பில்லியன் வழங்கப்படும் என்று வலிமைக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்துக்கு முன்பு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த
நெருக்கடிநிலையைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு அல்லது ஏறத்தாழ $100 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
“இந்தச் சவால்மிக்க காலகட்டத்தில் நமது மக்களுக்குப் பரிவு காட்டுவதும் ஆதரவு வழங்கவதும் மிகவும் முக்கியம். நமது குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினங்
களைச் சமாளிக்க இந்த வழங்கீடுகள் உதவும் என்று நம்புகிறோம்,” என்றார் திரு ஹெங்.
தங்களுக்குக் கிடைக்கும் வழங்கீடுகளை Giving.sg எனும் நிதி
திரட்டு இணையத்தளம் மூலம் நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவது குறித்து மக்கள் பரிசீலனை செய்யலாம் என்றார் அவர்.
இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தங்கள் அடையாள அட்டையுடன் PayNow கணக்கை இணைத்துக்கொள்வோருக்கு இம்மாதம் 18ஆம் தேதிக்குள் வழங்கீட்டுத் தொகை கிடைத்துவிடும். அரசாங்கம் வழங்கும் வழங்கீடுகளைப் பெற தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஏற்கெனவே சமர்ப்பித்தவர்களுக்கு இம்மாதம் 25 தேதியன்று வழங்கீட்டுத் தொகை கிடைக்கும்.
மற்றவர்களுக்கு இம்மாதம் 30ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் காசோலை மூலம் வழங்கீட்டுத் தொகை அனுப்பிவைக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில், அரசாங்க அதிகாரிகள் போல பாசாங்கு செய்து மோசடியில் ஈடுபடுவோர் விரிக்கும் வலையில் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. “தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அரசாங்கம் கேட்காது,” என்று அமைச்சு தெரிவித்தது. மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/csp2020 எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம். அல்லது 1800-2222-888 எனும் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.