உணவு வீணாவதை எதிர்கொள்ள இவ்வாண்டின் இறுதிக் காலாண்டிற்குள் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசதி குறைந்தவர்களுக்கு உணவு வழங்க உதவும் அமைப்புகளுடன் நன்கொடையாளர்களை இணைக்க இந்தச் செயலி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு அறநிறுவனமான தி ஃபுட்பேங்க் சிங்கப்பூரும் டிபிஎஸ் வங்கியும் இணைந்து இப்புதிய மெய்நிகர் உணவு வங்கி செயலியை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. உணவு வீணாக்கப்படுவதையும் போதுமான, சத்துள்ள உணவு பற்றாக்குறையையும் எதிர்கொள்ள இந்தச் செயலி உருவாக்கப்படு
வதாக டிபிஎஸ் வங்கி நேற்று கூறியது. தங்களிடம் உள்ள உணவு வகை, அளவு ஆகியவற்றை உணவு ஆதரவு அமைப்புகளுடன் செயலி மூலம் நன்கொடையாளர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
உணவு தேவைப்படுவோருக்குச் சரியான அளவு, வகை உணவுப்பொருட்களைக் கொண்டுபோய் சேர்க்க இந்தச் செயலி பயன்படுத்தப்படும் என்று செயலியை உருவாக்குவதற்கான செலவை ஏற்றுள்ள டிபிஎஸ் வங்கி கூறியது.
சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 4.1 விழுக்காட்டினருக்குப் போதுமான, சத்துள்ள உணவு கிடைப்பதில்லை என்று ஐநா கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதுமான, சத்துள்ள உணவு கிடைக்காத சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் அல்லது நீண்டகாலமாக வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினை கொண்டவர்கள் ஆவர்.
இவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட உணவு ஆதரவு அமைப்புகள் மூலம் ஆதரவு கிடைப்பதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது. தற்போதைய அணுகு முறையில் இருக்கும் சில சிறு குறைபாடுகளைப் புதிய செயலி நீக்கும் என்று நம்பப்படுகிறது. உதாரணத்துக்கு, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமான உணவு நன்கொடை செய்யப்படுவதாகவும் உதவி தேவைப்படும் பிறரையும் அடையாளம் காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.